ADDED : மார் 01, 2024 02:51 AM
புதுச்சேரி: மருத்துவமனைக்கு சென்ற நடன ஆசிரியரை தாக்கி கார் கண்ணாடியை உடைத்த இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மூலக்குளம் பசும்பொன் நகர், 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சக்திவேல், 42; இவர், நைஜீரியா நாட்டில் தனியார் நிறுவனத்தில் நடன ஆசிரியராக பணி செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரிக்கு வந்தார். அவர் உடல்நிலை பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு நேற்று தனது காரில் சென்றார்.
இந்நிலையில், இந்திராகாந்தி சிக்னல் அருகே காரை ஓரமாக நிறுத்தி விட்டு, அங்குள்ள டீ கடைக்கு சென்றார்.
இரண்டு வாலிபர்கள் காரை ஏன் இங்கு நிறுத்துகிறார் என சக்திவேலிடம் கேட்டனர். இதில் இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த இரண்டு பேரும், அவரை தாக்கி கார் கண்ணாடியை உடைந்து சேதப்படுத்தி விட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து, அவர் கொடுத்த புகாரின், ரெட்டியார்பாளயைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

