/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய தேர்வாணையம் கொடுத்த அதிகாரம்... தாரை வார்ப்பு
/
மத்திய தேர்வாணையம் கொடுத்த அதிகாரம்... தாரை வார்ப்பு
மத்திய தேர்வாணையம் கொடுத்த அதிகாரம்... தாரை வார்ப்பு
மத்திய தேர்வாணையம் கொடுத்த அதிகாரம்... தாரை வார்ப்பு
ADDED : மே 06, 2024 05:30 AM
புதுச்சேரி : மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் 'பிளாங்க்செக்' போல் கொடுத்த அதிகாரத்தை புதுச்சேரி அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை தாரை வார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதுச்சேரி அரசின் முக்கிய பதவிகளில் ஒன்றான அமைச்சக உதவியாளர் பதவி உள்ளது. இந்த பதவிக்கான நேரடி நியமன விதியை 2012ம் ஆண்டு வெளியிட்டது. இதில், புதுச்சேரி உதவியாளர் பதவிக்கு இந்தியாவில் எந்தப் பகுதியில் இருந்தாலும், அந்தமான் நிக்கோபார் லட்சத்தீவு, மலைப்பிரதேசமான மிசோரம், அருணாச்சல பிரதேசத்தில் வசிப்பவர்களும் உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என, குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு புதுச்சேரியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பிற மாநில மாணவர்களுடன் மண்ணில் மைந்தர்கள் போட்டி போட்டு வெற்றிப் பெற்று தான், புதுச்சேரி அரசு பணியில் சேர வேண்டுமா என கொந்தளிப்பு ஏற்பட்டது.
இதன் விளைவாக கடந்த 10 ஆண்டுகளாக நேரடி நியமனம் மற்றும் போட்டித் தேர்வு நடத்தாமல், அனைத்து உதவியாளர் பதவிகளையும் 100 சதவீதம் பதவி உயர்வு மூலம் அரசு நிரப்பி வருகிறது.
ஆனால் அண்மையில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, 100 சதவீத பதவி உயர்வு, துறை ரீதியான போட்டித் தேர்வு அமுல்படுத்த முன்வராததால் புதுச்சேரி அமைச்சக ஊழியர்கள் சங்கம் மத்திய நிர்வாக தீர்ப்பாணையத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கில் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் தெளிவான அறிவுறுத்தலை புதுச்சேரி அரசாங்கத்திற்கு மத்திய நிர்வாக தீர்ப்பாணையத்தில் பதில் மனுவாக தாக்கல் செய்துள்ளது.
அதில் அமைச்சக ஊழியர்களின் 100 சதவீத பதவி உயர்வு கோரிக்கையை மாநில அரசின் பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறையே வழங்கி கொள்ளலாம் என்று தெள்ளத் தெளிவாக கூறியது.
ஆனால், மாநில அரசின் பணியாளர் நிர்வாக சீர்த்திருத்த துறையோ புதுச்சேரி அரசாங்கத்திற்கு, மத்திய தேர்வாணையம் அளித்த பொன்னான அதிகாரத்தை நிராகரித்து, அப்படியெல்லாம் செய்ய முடியாது மத்திய நிர்வாக தீர்ப்பாணையத்தில் தற்போது பதில் மனுத்தாக்கல் செய்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது ஒட்டுமொத்த அமைச்சக ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சியாளர்கள் புதுச்சேரி அரசாங்கத்திற்கு அதிகாரம் வேண்டுமென்று தொடர்ந்து போர் கொடி உயர்த்தி வலியுறுத்தி வரும் சூழ்நிலையில், தற்போது மத்திய பணியாளர் தேர்வாணையம் தானாக முன்வந்து 'பிளாங்க்செக்' போல் கொடுத்த அதிகாரத்தை துாக்கி எறிவது ஆட்சியாளர்கள் கோரும் அதிகார பகிர்வை நிர்மூலம் ஆக்கிவிட்டதாக குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளனர்.
மேலும், இந்தியாவில் எந்த மாநிலத்திலாவது, இப்படிப்பட்ட அதிகாரத்தை கொடுத்திருந்தால் அதனை கொண்டு அந்த மாநில அதிகாரிகள் அடுத்தடுத்த அரசு பணிகளை மண்ணின் மைந்தர்களுக்கு கிடைக்கும்படி செய்து இருப்பார்கள்.
ஆனால் தானாக கிடைத்த அரசு பணி நிரப்பும் பொன்னான வாய்ப்பினை வேண்டாம் என்று புதுச்சேரி அரசு, தள்ளிவிட்டு தட்டி கழித்துள்ளது. அரசின் தொலைநோக்கு பார்வையில்லாததை இது காட்டுகின்றது என்று அடுக் கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ள அமைச்சக ஊழியர்கள் அடுத் தடுத்த போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.