ADDED : அக் 06, 2024 04:26 AM

புதுச்சேரியின் நெற்களஞ்சியமான பாகூரில், சொர்ணவாரி பட்ட அறுவடை பணி நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் தற்போது, சம்பா பருவத்திற்கான உழவு பணிகளும் துவங்கி, நடந்து வருகிறது. இதற்காக, விவசாயிகள் தங்களது வயலில் நீர் பாய்ச்சி டிராக்டர் மூலம் உழுது, நாற்று நடுவதற்கு ஏற்ப நிலத்தை பதப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உழவு பணியின் போது, சேற்றில் இருந்து வெளிவரும் புழு, நத்தை, பூச்சிகளை உண்பதற்காக, கொக்கு, நாரை, செரவி போன்ற பல வகையான பறவைகள் பாகூர் பகுதியில் முகாமிட்டுள்ளன.
பாகூர், கிருமாம்பாக்கம், ஆதிங்கப்பட்டு, பரிக்கல்பட்டு, சேலியமேடு, பின்னாட்சிக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வயல்களில் பறவைகள் கூட்டம் கூட்டமாக இறங்கி இரையை தேடி கொத்தி சாப்பிடுகின்றன.
வயல்வெளி பகுதியில் சுற்றித்தரியும் பறவைகள் கூட்டத்தால், பாகூர் பகுதி ஒரு குட்டி பறவைகள் சரணாலயமாக காட்சி அளிக்கிறது. பறவைகள் இரை தேடும் காட்சியை, பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் சென்று கண்டு ரசிப்பது மட்டுமல்லாமல், ஆர்வத்துடன் வீடியோ மற்றும் போட்டோக்கள் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.