புதிய முதலீடுகளை ஈர்க்க புதுச்சேரி அரசு தீவிர திட்டம் :தொழில் கொள்கையை மாற்றியமைக்க முடிவு
புதிய முதலீடுகளை ஈர்க்க புதுச்சேரி அரசு தீவிர திட்டம் :தொழில் கொள்கையை மாற்றியமைக்க முடிவு
UPDATED : செப் 07, 2026 11:14 PM
ADDED : செப் 07, 2026 10:55 PM
புதுச்சேரி: முதலீடுகளை ஈர்த்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்த புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தற்போதுள்ள தொழில் கொள்கையை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தின் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும், இளைஞர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கவும் புதுச்சேரி அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, தொழில் உற்பத்தி, மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் நோக்கில், தற்போது நடைமுறையில் உள்ள தொழில் கொள்கையை முற்றிலும் மாற்றியமைத்து, புதிய நவீன தொழில் கொள்கையை உருவாக்க அரசுத் துறை களம் இறங்கியுள்ளது.
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்:
தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் உட்கட்டமைப்பு வசதிகள் மிக முக்கியமான பங்காற்றுகின்றன. இதனை உணர்ந்து, மாநிலத்தில் இரு பெரும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்கும் நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது. காரைக்காலில் 213 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான 'பல்துறை சிறப்புப் பொருளாதார மண்டலம்' உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இது பல்வேறு உற்பத்தித் துறைகள், ஏற்றுமதி சார்ந்த தொழிற்சாலைகள் மற்றும் கனரக நிறுவனங்கள் தங்களது உற்பத்தி பிரிவுகளை இங்கு அமைக்கப் பெருமளவில் வழிவகுக்கும். இதேபோல் தட்டாஞ்சாவடியில் 21 ஏக்கர் பரப்பளவில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளுக்கான பிரத்யேகச் சிறப்புப் பொருளாதார மண்டலம் ஏற்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் உலகளாவிய ஐ.டி. நிறுவனங்கள் புதுச்சேரியை நோக்கி ஈர்க்கப்பட்டு, உள்ளூர் பொறியியல் மற்றும் கணினிப் பட்டதாரி இளைஞர்களுக்கு உயர்தர தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் உள்ளூரிலேயே கிடைக்கும் சூழல் உருவாகும்.
புதிய தொழில் கொள்கை:
அடுத்தக்கட்டமாக இன்றைய நவீன காலகட்டத்தின் தேவைகளுக்கும், உலகளாவிய சந்தையின் மாற்றங்களுக்கும் ஏற்ப புதிய தொழில் கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஆய்வுப் பணிகளில் தொழில் துறை தீவிரமாக இறங்கியுள்ளது.
பிற மாநில ஆய்வு:
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவரும் வகையில் நெகிழ்வுத்தன்மை கொண்ட கொள்கை வரைவுகளை உருவாக்க, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைமுறையிலுள்ள சிறந்த தொழில் கொள்கைகள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
தொழில் அமைப்புகளுடன் கலந்தாய்வு:
ஏற்கனவே மாநிலத்தில் இயங்கி வரும் தொழில் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியைப் பெருக்கவும், தொழில் விரிவாக்கவும் தேவையான ஊக்குவிப்புகளை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக விரைவில் பல்வேறு தொழில் கூட்டமைப்புச் சங்கங்களின் கருத்துகளும் ஆலோசனைகளும் பெறப்பட உள்ளன.
முன்னுரிமை :
புதிய தொழில் கொள்கையில் சுற்றுச்சூழலைப் பாதிக்காத செயற்கை நுண்ணறிவு, பசுமை ஆற்றல் , எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மற்றும் உயிரி தொழில்நுட்பம், பார்மா போன்ற வளர்ந்து வரும் நவீன தொழில் துறைகளை ஊக்குவிக்க முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. புதிய தொழில் கொள்கை புதுச்சேரியை நவீனமயமாக்கலின் பாதைக்கு அழைத்துச் சென்று, நாட்டின் சிறந்த தொழிற்துறை மாநிலங்களில் ஒன்றாக நிலைநிறுத்தும். இத்திட்டங்களின் இறுதி இலக்காக உள்ளூர் இளைஞர்களுக்குப் பெருமளவிலான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகி, மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் கணிசமான வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
