ADDED : ஆக 20, 2026 11:33 PM
புதுச்சேரி: உழவர்கரை பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு முடக்கத்தால் பொது மக்கள் அவதியடைந்தனர்.
உழவர்கரை பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் பதிவாளர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 14ம் தேதி விடுப்பில் சென்றார். இதனால் கடந்த ஒரு வாரமாக புதுச்சேரி தலைமை பத்திரப்பதிவு அலுவலகத்திலிருந்து பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, பத்திரங்களைப்பதிவு செய்து தருகின்றனர். இருப்பினும், அவர்கள் மதியம் 3:00 மணிக்கு மேல் வந்து பதிவு செய்வதால் மாலை 6:00 மணிக்குள் பத்திரப்பதிவு நடப்பதால், சில பத்திரங்கள் மட்டுமே பதிவு செய்யு முடிகிறது. இதனால் காலை முதல் மாலை வரை காத்திருக்கும் பொதுமக்கள் சொத்து வாங்குதல், விற்பனை செய்தல், அவசரக் கடனுக்காக பத்திரம் முடித்தல் போன்ற முக்கியத் தேவைகளுக்காக காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
அதிகாரிகளின் இந்த மெத்தனப் போக்கால் தங்களது அன்றாடப் பணிகளும், நிதிப் பரிவர்த்தனைகளும் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகப் பத்திரப் பதிவு செய்ய வந்த பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக உழவர்கரை நகராட்சிக்கு பதிவாளரை நியமித்து, தடையின்றி பத்திரப்பதிவு நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
