ஓட்டல் மீது வெடிகுண்டு வீச்சு: திருபுவனையில் பயங்கரம்; மர்ம ஆசாமிகள் 2 பேருக்கு போலீஸ் வலை
ஓட்டல் மீது வெடிகுண்டு வீச்சு: திருபுவனையில் பயங்கரம்; மர்ம ஆசாமிகள் 2 பேருக்கு போலீஸ் வலை
ADDED : பிப் 16, 2025 05:25 AM

திருபுவனை, பிப்.16-
முன்விரோதம் காரணமாக ஓட்டல் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய இருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி அடுத்த திருபுவனையை சேர்ந்தவர் செந்தில்குமார்,50; திருபுவனை மேம்பாலம் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு சுகாசினி என்ற மனைவியும், ராகுல் 23; என்ற மகனும் உள்ளனர்.
ராகுலின் நண்பர் திருவாண்டார்கோயிலை சேர்ந்த சபரி, ஒரு பெண்ணை காதலித்தார். அதற்கு, அந்த பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனையும் மீறி, சபரி அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள ராகுல் உதவி செய்துள்ளார்.
அதன்பிறகு ராகுல் மற்றும் சபரிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில் நேற்று மதியம், சபரி திருபுவனையில் உள்ள ஏ.டி.எம்., மையத்திற்கு சென்றார். அங்கு ராகுலுடன் பேசிக் கொண்டிருந்த சபரியின் மாமனார், சபரியை சுட்டிக்காட்டி ஆபாசமக திட்டினார்.
அதனைக் கேட்டு ராகுல் சிரித்தார். ஆத்திரமடைந்த சபரி அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில் நேற்று இரவு 7.25 மணிக்கு ஸ்கூட்டியில் வந்த மர்ம நபர்கள் இருவர், ராகுலின் ஓட்டல் மீது நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பிச்சென்றனர்.
அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி, கடும் புகை மூட்டம் ஏற்பட்டதால், கடை வீதியில் இருந்த வியாரிகள் மற்றும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.
திருபுவனை போலீசார் தடயவியல் நிபுணர்களுடன் சென்று, சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் கிடைத்த தகவலின் பேரில், நாட்டு வெடிகுண்டு வீசிய இருவரில் ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். ஓட்டல் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் திருபுவனையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிரட்டியவர் யார்?
ராகுல் போலீசாரிடம் கூறுகையில், பகல் 12:15 மணிக்கு, என்னை போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஓட்டலை காலி செய்துவிடுவதாக மிரட்டினர்.
பகல் 1:30 மணிக்கு எனது வீட்டிற்கு ஸ்கூட்டியில் வந்த திருவாண்டார்கோயிலை சேர்ந்த இருவர் மிரட்டிவிட்டு சென்றதாக கூறியுள்ளார்.
