டியூஷன் ஆசிரியரை கொலை செய்ய வெடிகுண்டு வீசியவர் படுகாயம்
டியூஷன் ஆசிரியரை கொலை செய்ய வெடிகுண்டு வீசியவர் படுகாயம்
ADDED : ஆக 21, 2026 06:35 PM
புதுச்சேரி: மனைவி பிரிய காரணம் என நினைத்து டியூஷன் ஆசிரியரை வெடிகுண்டு வீசி துணிகடை கேஷியர் கொலை செய்ய முயன்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தை சேர்ந்தவர் பிரேம்குமார், 35. இவர் லாஸ்பேட்டை கபிலர் நகரில் டியூஷன் சென்டர் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு டியூஷன் முடித்து வெளியே வந்த போது, உணவு டெலிவரி செய்யும் பணியாளர் போல் பைக்கில் வந்த ஒருவர் பிரேம்குமார் மீது நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசினார்.
அதில் சுதாரித்த பிரேம்குமார் தப்பியோடினார். தொடர்ந்து அவர் மீது பைக்கில் வந்த நபர் மற்றொரு நாட்டு வெடிகுண்டை எடுத்து வீச முயன்றபோது, எதிர்பாதரவிதமாக குண்டு வெடித்து அவரது கையே சேதமானது. தகவல் அறிந்து வந்த லாஸ்பேட்டை போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மரில் அனுதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், வெடிகுண்டை வீசியது, ரெட்டியார்பாளையம் மரியாள் நகர் ரவீந்திரன், 45; துணிக்கடை கேஷியர் என்பதும், இவரது மகள் மகள் பிரேம்குமார் நடத்தி வரும் டியூஷன் சென்டரில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் படித்துள்ளார்.
மகளை அழைக்க சென்றபோது, அவரின் மனைவி பிரேம்குமாரிடம் பேசி வந்துள்ளார். இதனால் ரவீந்திரன் சந்தேகமடைந்ததால், கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
தன் மனைவி பிரிய பிரேம்குமார்தான் காரணம் என நினைத்த, ரவீந்திரன் அவர் மீது நாட்டு வெடி குண்டு வீசி கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, போலீசார் ரவீதிரனிடமிருந்து, வெடிக்காத நாட்டு வெடி குண்டு, பைக், அரிவாளை பறிமுதல் செய்தனர்.
