/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மூளை சாவு அடைந்த மாணவி உடல் உறுப்பு தானம்
/
மூளை சாவு அடைந்த மாணவி உடல் உறுப்பு தானம்
ADDED : ஜூலை 16, 2025 01:57 AM

புதுச்சேரி : மூளை சாவு அடைந்து, உடல் உறுப்பு களை தானம் வழங்கிய மாணவியின் உடலுக்கு அரசு சார்பில், கலெக்டர் குலோத்துங்கன் மலர் வளையம் வைத்துமரியாதை செலுத்தினார்.
புதுச்சேரி, பிரியதர்ஷினி நகரை சேர்ந்த டாக்டர்களான ராஜேஸ்வரி - அகோரம் தம்பதி, ஜிப்மரில் பணியாற்றி வருகின்றனர். கேரளாவை சேர்ந்த அவர்களின் மகள் இலாநிஷாத், 14, 10ம் வகுப்பு படித்து வந்தார். நீச்சல் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ள இலாநிஷாத், கடந்த சில தினங்களுக்கு முன் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டபோது, தலையில் காயமடைந்து ஜிப்மரில்அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது மூளை சாவு அடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அவரது பெற்றோர் இலாநிஷாத் உடல் உறுப்புகளை மருத்துவமனைக்கு தானமாக வழங்க முன்வந்தனர்.
இதனை கவுரவிக்கும் வகையில் அரசு சார்பில், கலெக்டர் குலோத்துங்கன் நேற்று மாலை ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்று, இலாநிஷாத் உடலுக்கு மலர் வளையம் வைத்துமரியாதை செலுத்தினார்.
மேலும், ஜிப்மர் டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.