/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜிப்மரில் புற்றுநோய் விழிப்புணர்வு
/
ஜிப்மரில் புற்றுநோய் விழிப்புணர்வு
ADDED : மார் 12, 2026 04:23 AM

புதுச்சேரி: மகளிர் தினத்தையொட்டி, ஜிப்மர் சார்பில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, ஜிப்மர் மகளிர் தின கொண்டாட்டக் குழு, மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ துறையுடன் இணைந்து, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், ஆரம்ப கட்ட கண்டறிதலை ஊக்குவிக்கும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நடைபயணம் புதுச்சேரி கடற்கரை சாலையில் நேற்று நடந்தது.
ஜிப்மர் பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய்களுக்கு எதிராக ஆரம்பகட்ட பரிசோதனை, தடுப்பூசி, ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இன்று (12ம் தேதி), நாளை (13ம் தேதி) ஜிப்மரில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்காக கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம் நடக்கிறது.
ஜிப்மர் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத் துறை வெளி நோயாளர் பிரிவில் நடைபெற உள்ள இந்த முகாமில், மருத்துவ பரிசோதனை, ஆலோசனை மற்றும் தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, ஆரம்ப கட்ட கண்டறிதலையும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட உள்ளது.

