ADDED : ஜூலை 04, 2026 03:17 AM

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் துறை சார்பில், கருப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்பட்டது.
இந்த இயக்கத்தின் வாயிலாக, பொதுமக்கள், நோயாளிகள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஜிப்மர் மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் வெளி நோயாளர் பிரிவில், சர்வதேச மகப்பேறு புற்றுநோய் கழகத்தின் கல்விப் பதாகைகள் மற்றும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட விழிப்புணர்வு கையேடுகளை வெளியிட்டு நோயின் அறிகுறிகள் குறித்து விளக்கப்பட்டது.
முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் நடந்தது. இதில் கருப்பை புற்றுநோய் மேலாண்மை, நவீன சிகிச்சை முறைகள், நோய் எதிர்ப்பு சிகிச்சை மற்றும் சர்வதேச வழிகாட்டுதல்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இயக்கத்தின் நிறைவாக, கருப்பை புற்றுநோயை தடுக்க ஆரம்பத்திலேயே கண்டறிவதிலும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் ஜிப்மர் அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் எந்தவொரு ரத்தப்போக்கையும் அலட்சியம் செய்யக்கூடாது. இது அபாயகரமானதாக இருக்கலாம் என்பதால், உடனடியாக மகளிர் நோய் நிபுணரை அணுக வேண்டும்.
அதிகப்படியான அல்லது மிக நீண்ட நாட்களாக நீடிக்கும் மாதவிடாய் ரத்தப்போக்கு இயல்பானதல்ல. இதற்கு உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். உடல் பருமன், உடற்பயிற்சியற்ற வாழ்க்கை முறை, குழந்தை பெறாத நிலை, தாமதமான மாதவிடாய் நிறைவு, நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கருப்பை புற்று நோய்க்கான முக்கிய ஆபத்து காரணிகளாகக் கருத வேண்டும்.
ஆரம்ப நிலையிலேயே புற்று நோயை கண்டறிவதே நோயாளிகளின் உயிர் காக்கும் சிறந்த வழியாகும் என்பதை ஜிப்மர் மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் துறை அறிவுறுத்தியுள்ளது.
