/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்கள் மாநாடு
/
மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்கள் மாநாடு
ADDED : பிப் 24, 2026 04:24 AM

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேச, மாவட்ட அளவிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்கள் மாநாடு நேற்று நடந்தது.
2027ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின், முதல் கட்டமான வீட்டு பட்டியல் தயாரித்தல், வீட்டு வசதி கணக்கெடுப்புப் பணிகளுக்கான ஆயத்த நிலையை ஆய்வு செய்தலின் ஒருங்கிணைந்த செயல்பாட்டை உறுதி செய்யும் நோக்கில் நடந்த இம்மாநாட்டிற்கு, தலைமைச் செயலர் சரத் சவுகான் தலைமை தாங்கி பேசுகையில்'' அனைத்து அலுவலர்களும் 1948ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டம் மற்றும் அதன் திருத்தங்கள் குறித்து நன்கு அறிந்திருக்க வேண்டும்.
கணக்கெடுப்புப் பணிகளை உரிய காலத்தில் முடிப்பதன் அவசியம், புள்ளி விவரங்களின் துல்லியம் மற்றும் நம்பகத் தன்மையின் முக்கியத்துவம் குறித்த விளக்கினார். வருவாய்த் துறை செயலர் கிருஷ்ண மோகன் உப்பு பேசுகையில்'' புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கணக்கெடுப்புப் பணிகளுக்கான ஆயத்த நடவடிக்கைகளின் முன்னேற்றம், அதற்கான கால அட்டவணை குறித்து விளக்கினார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்பாட்டு இயக்குநர் சுந்தரேஷ் பாபு, 'கணக்கெடுப்புப் பணியின் பல்வேறு அம்சங்கள், செயல்பாட்டு உத்திகள் மற்றும் செயல்படுத்துவதற்கான காலக்கெடு குறித்து விளக்கினார். இணை இயக்குநர் புவனேஸ்வரி, 'டிஜிட்டல் முறையிலான கணக்கெடுப்பு மற்றும் சுய விவரப் பதிவேற்ற நடைமுறைகள் குறித்து விளக்கினார்.
தொடர்ந்து, மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டம், சுய விவரப் பதிவேற்றம் மற்றும் மொபைல் செயலி தொடர்பாக பங்கேற்பாளர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். உள்ளாட்சி நிர்வாக செயலர், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறைச் செயலர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் கலெக்டர்கள், மாவட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
துணை இயக்குநர் ஜெயபாரதிராஜ் நன்றி கூறினார்.

