சென்டாக் எம்.டி.எஸ்., படிப்பிற்கு 2ம் கட்ட கலந்தாய்வு பதிவு கட்டணம் செலுத்தும் வழிமுறைகள் வெளியீடு
சென்டாக் எம்.டி.எஸ்., படிப்பிற்கு 2ம் கட்ட கலந்தாய்வு பதிவு கட்டணம் செலுத்தும் வழிமுறைகள் வெளியீடு
ADDED : செப் 16, 2026 08:52 PM
புதுச்சேரி: எம்.டி.எஸ்., இரண்டாம் கட்ட கலந்தாய்வு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை சென்டாக் வெளியிட்டுள்ளது.
சென்டாக் எம்.டி.எஸ்., படிப்பில் அரசு மற்றும் சுயநிதி பல் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள அரசு, மேனேஜ்மென்ட், தெலுங்கு சிறுபான்மையினர், என்.ஆர்.ஐ., ஒதுக்கீடுகளுக்கான சேர்க்கை விருப்பப் பதிவுகள் தற்போது வரவேற்கப்பட்டுள்ளன. சென்டாக்கில் ஏற்கனவே பதிவு செய்துள்ள அனைத்து மாணவர்கள், முதல் கட்ட கலந்தாய்வில் இடம் பெற்றவர்கள் மற்றும் பெறாதவர்கள் உட்பட அனைவரும் இதில் பங்கேற்கலாம்.
விருப்பப் படிப்புகளை பதிவு செய்ய வரும் 21ம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் பதிவு செய்த விருப்பங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், 2ம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க விரும்புபவர்கள் புதிய விருப்பப் பட்டியலைச் சமர்ப்பிக்க வேண்டும். முதல் கட்ட கலந்தாய்வில் சேர்க்கை பெற்ற மாணவர்கள், அபராதக் கட்டணம் இன்றி தங்கள் இடங்களை ராஜினாமா செய்ய விரும்பினால், 22ம் தேதி மாலை 5 மணிக்குள் தங்களின் லாக்-கின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
பதிவுக் கட்டணம்:: இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட பதிவுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அரசு ஒதுக்கீட்டினை பொருத்தவரை பொது, ஓ.பி.சி., இ.டபுள்யூ.எஸ்., எம்.பி.சி., உள்ளிட்ட பிரிவினர் ரூ.25,000 பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். அரசு ஒதுக்கீட்டில் இ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ.10,000 பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். மேனேஜ்மென்ட் , என்.ஆர்.ஐ., ரூ. 2,00,000 கட்டணம் செலுத்த வேண்டும்.
முதல் கட்ட கலந்தாய்வில் இடம் கிடைத்துச் சேர்ந்த மாணவர்கள் இ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., பிரிவினரைத் தவிர மீண்டும் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. ஆனால், முதல் கட்டத்தில் சேர்க்கை பெற்ற இ.பி.சி., எஸ்சி., எஸ்.டி., மாணவர்கள், 2ம் கட்டத்தில் பங்கேற்க முறையே ரூ.10,000- (அரசு ஒதுக்கீடு) அல்லது ரூ.2,00,000 (மேனேஜ்மென்ட் ஒதுக்கீடு) செலுத்த வேண்டும்.
அரசு மற்றும் மேனேஜ்மென்ட் ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பிக்கும் புதுச்சேரி மாணவர்கள் மேனேஜ்மென்ட் ஒதுக்கீட்டிற்கான ரூ.2,00,000- கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது. இரண்டாம் கட்டத்தில் இடம் ஒதுக்கப்பட்டு மாணவர்கள் கல்லுாரியில் சேரும் பட்சத்தில், இந்தப் பதிவுக் கட்டணம் அவர்களின் கல்விக் கட்டணத்தில் சரிசெய்யப்படும்.
இடம் ஏதும் கிடைக்காத மாணவர்களுக்குப் பதிவுக் கட்டணம் கலந்தாய்வு முடிவில் திரும்ப அளிக்கப்படும். ஆனால், இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டும் கல்லுாரியில் சேராவிட்டால் பதிவுக் கட்டணம் திரும்ப வழங்கப்படாது.
பதிவு கட்டணத்தை வரும் 21ம் தேதி மாலை 5 மணி வரை செலுத்தலாம். முதல் கட்ட கலந்தாய்வு சீட்டினை 22ம் தேதி மாலை 5 மணி வரை திரும்ப ஒப்படைக்கலாம். கூடுதல் விவரங்கள் மற்றும் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் www.centacpuducherry.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது 0413-2655570, 2655571 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளவும் என சென்டாக் அறிவுறுத்தியுள்ளது.
