ADDED : பிப் 15, 2025 06:36 AM

புதுச்சேரி : அரியாங்குப்பத்தில் 'ஒரு வீடு ஒரு மரம்' திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு 1000 மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திரமோடி 'தாயின் பெயரில் ஒரு மரம்' என்ற இயக்கத்தை துவக்கி வைத்தார்.
இந்த இயக்கத்தின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் புதுச்சேரி பசுமை பரப்பை இரட்டிப்பாக்கும் நோக்கத்துடன், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
ஒரு வீடு ஒரு மரம், நகர்புற தோட்டம், கிராமப்புற காடு வளர்ப்பு, கோவில் காடுகளை மீட்டெடுத்தல், பசுமை பள்ளி வளாகம், பசுமை தொழிற்சாலைகள் உட்பட 7 கூறுகளை கொண்டு இத்திட்டத்தின் மூலம் நடப்பு பருவ மழை காலத்திற்குள் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகள் நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக 'ஒரு வீடு ஒரு மரம்' திட்டத்தின் கீழ் அரியாங்குப்பத்தில் பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கும் விழா நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., பாஸ்கர், மா, கொய்யா, எலுமிச்சை, மாதுளை, சப்போட்டா உள்ளிட்ட 1000 மரகன்றுகளை வழங்கினார்.
மாசுக் கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் தலைமையில், சுற்றுச்சூழல் துறை இளநிலை பொறியாளர் பிரபு, இளநிலை ஆய்வக உதவியாளர் இளங்கோ, திட்ட அலுவலர்கள் சாந்தலட்சுமி, விமல்ராஜ் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

