ADDED : ஆக 13, 2026 04:21 PM
செங்கழுநீரம்மன் கோவில், மூலஸ்தான அம்மனின் பேரருளோடு மட்டுமல்லாமல், பல உப சன்னதிகளையும் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் புண்ணிய ஸ்தலமாக விளங்கி வருகிறது.
வினை தீர்க்கும் விநாயகர் சன்னதி செங்கழுநீர் அம்மனுக்குப் பூஜை செய்வதற்கு முன் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கும் வினைதீர்க்கும் விநாயகருக்கு முதன்மைப் பூஜை செய்யப்படுகின்றன.
தோஷம் போக்கும் நவகிரக சன்னதி இக்கோவிலில் அமைந்திருக்கும் நவகிரக சன்னதி மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சனிக்கிழமைகளில் ஆண், பெண் இருபாலரும் திரண்டு வந்து நெய்விளக்கேற்றி வழிபடுகின்றனர். ஜாதகத்தில் சனி தோஷம், ஏழரைச் சனி, அஷ்டம சனியால் தவிப்பவர்கள் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் நவகிரகங்களையும் சனிபகவானையும் வலம் வந்து வழிபட்டால், சகல தோஷங்களும் நீங்கி நிம்மதி பெறலாம் என்பது நம்பிக்கை.
மாங்கல்ய பலம் தரும் துர்க்கை அம்மன் சன்னதி துர்க்கை அம்மனுக்கு செவ்வாய்க்கிழமைகளில் ராகு கால நேரத்தில் நெய்விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு. சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவனின் ஆயுள் கூடி, சுமங்கலி பாக்கியம் நிலைக்க பிரார்த்திக்கின்றனர். கன்னிப் பெண்கள் வாழ்க்கைத் துணை அமைந்திடத் துர்க்கை அம்மனின் பாதங்களில் தீபமேற்றி வேண்டிக் கொள்கின்றனர்.
தீராத நோய் தீர்க்கும் சப்த கன்னியர் சன்னதி ராஜகோபுர நுழைவு வாயிலின் இடப்புறம் அமைந்துள்ள சப்த கன்னியர் சன்னதி, திருமண தடையைப் போக்கும் அற்புதத் தலமாகும். திருமண ஆகாத பெண்கள் இச்சன்னதியில் விளக்கேற்றி மனமுருகிப் பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணம் கைகூடும். மேலும், சப்த கன்னியரைத் தொடர்ந்து வழிபட்டு வர, தீராத நோய் நொடிகளிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்வு பெறலாம் என்பது நம்பிக்கை.
லாட்டரி பரிசும்... முருகன் சன்னதியும் இக்கோவிலில் உள்ள முருகன் சன்னதிக்குப் பின்னணியில் சுவாரசியமான கதை உண்டு. சென்னையைச் சேர்ந்த புஷ்பலிங்கம் என்பவர் வீராம்பட்டினத்திற்கு வந்து தங்கியிருந்தார். தீவிர முருக பக்தரான இவருக்கு, புதுச்சேரி அரசு நடத்திய லாட்டரி சீட்டில் அன்றைய காலத்தில் 5 லட்சம் ரூபாய் பரிசு விழுந்தது. தனக்குக் கிடைத்த அந்தப் பணத்தைக் கொண்டு, செங்கழுநீரம்மன் கோவில் வளாகத்திற்குள்ளேயே சுப்ரமணியருக்குத் தனி சன்னதி கட்டி கும்பாபிஷேகமும் செய்து வைத்தார்.
