புதுச்சேரியில் இரவு நேர துப்புரவு பணி: கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு
புதுச்சேரியில் இரவு நேர துப்புரவு பணி: கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு
UPDATED : ஜூன் 04, 2026 08:23 PM
ADDED : ஜூன் 04, 2026 07:42 PM

புதுச்சேரி: புதுச்சேரி நகர பகுதியை 24 மணி நேரமும் துாய்மையாக வைத்திருக்க வேண்டும் என, கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டார்.
கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில், புதுச்சேரி நகராட்சி ஆணையர் ஸ்ரீஜித், சுகாதார பிரிவு இளநிலை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு துப்புரவு பணிகள் தொடர்பாக, புதுச்சேரி புதிய பஸ்நிலையம், மறைமலை அடிகள் சாலை, அண்ணா சாலை, ஜவஹர்லால் நேரு வீதி, மகாத்மா காந்தி வீதி, சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, கிரீன் வாரியர் துணை தலைவர் ஜெகதீசன், ஒருங்கிணைப்பு அதிகாரி லலித் உடனிருந்தனர்.
இந்த ஆய்வில், நேரு வீதி மற்றும் புதிய பஸ் நிலையத்தில் உடனுக்குடன் குப்பைகளை அகற்றும் பணி சரிவர நடைபெறவில்லை என்பது தெரிய வந்தது. மேலும், எண்ணிக்கையில் குறைவான துாய்மை பணியாளர்களையும், வாகனங்களையும் பயன்படுத்தி வருவதும், ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணி செய்வதும் தெரியவந்தது.
இது குறித்து கலெக்டர் குலோத்துங்கன், கிரீன் வாரியர் நிறுவனத்தின் துணை தலைவர் ஜெகதீசனிடம், துாய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களையும், போதுமான ஊழியர்களையும், வாகனங்களையும் பணியில் ஈடுபடுத்திட வேண்டும். 24 மணி நேரமும் புதுச்சேரி நகரத்தில், துாய்மை பணியை செய்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். துாய்மை பணியாளர்களுக்கு, தொழிலாளர் நலத்துறையின் ஆணைப்படி, குறைந்த பட்ச மாத சம்பளமாக உயர்த்தி அளிக்கவும் வேண்டும் என, உத்தரவிட்டார்.
