தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., ஆடுபுலி ஆட்டம்... முடிவுக்கு வருகிறது:புதிய இலாகா பட்டியலை கொடுக்க ரங்கசாமி முடிவு

புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., ஆடுபுலி ஆட்டம்... முடிவுக்கு வருகிறது:புதிய இலாகா பட்டியலை கொடுக்க ரங்கசாமி முடிவு

புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., ஆடுபுலி ஆட்டம்... முடிவுக்கு வருகிறது:புதிய இலாகா பட்டியலை கொடுக்க ரங்கசாமி முடிவு


UPDATED : ஆக 04, 2026 10:57 PM

ADDED : ஆக 04, 2026 08:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 04, 2026 10:57 PM ADDED : ஆக 04, 2026 08:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: என்.ஆர்.காங்., - பா.ஜ., இடையே ஆடுபுலி ஆட்டமாக நடந்து வந்த இலாகா ஒதுக்கீடு விவகாரம் முடிவுக்கு வருகிறது. புதிய இலாகா பட்டியலை கவர்னரை சந்தித்து அளிக்க முதல்வர் ரங்கசாமி முடிவு செய்துள்ளார்.

புதுச்சேரி அமைச்சரவையில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸைச் சேர்ந்த 3 அமைச்சர்கள், பா.ஜ.,வைச் சேர்ந்த 2 அமைச்சர்கள் பதவி வகித்து வருகின்றனர். இருப்பினும், அவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை.

கடந்த ஜூலை 20ம் தேதி, அமைச்சர்களுக்கான இலாகா பட்டியலை முறைப்படி தயார் செய்த முதல்வர் ரங்கசாமி, அதனை கவர்னர் கைலாஷ்நாதனின் ஒப்புதலுக்காக பரிந்துரைத்தார். ஆனால், பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டு 15 நாட்களாகியும் கவர்னர் மாளிகையிலிருந்து ஒப்புதல் அளிக்கப்படாமல் காலதாமதம் நீடித்து வந்தது.

அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்படாததால், துறை சார்ந்த முக்கியக் கோப்புகளில் முடிவெடுக்கவோ, மக்கள் நலத் திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திடவோ இயலாத சூழல் உருவானது.

இதனால் புதுச்சேரியின் அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம்சாட்டி வந்தன. இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் தலைமையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து இது குறித்து முறையிட்டனர். அப்போது, ஓரிரு தினங்களில் இலாகாக்கள் ஒதுக்கப்படும் என்று கவர்னர் உறுதியளித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். ஆனாலும் இலாகா ஒதுக்கப்படவில்லை.

அதனை தொடர்ந்து, கடந்த 1ம் தேதி முதல்வர் ரங்கசாமி இரண்டாவது முறையாக கவர்னர் சந்தித்துப் பேசினார். இருப்பினும், உடனடியாக இலாகா அறிவிப்பு வெளியாகவில்லை. இதற்கிடையில் கவர்னர் கைலாஷ்நாதனை மீண்டும் முதல்வர் ரங்கசாமி சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

அப்போது, ஏற்கனவே தான் அனுப்பியிருந்த இலாகா பட்டியலைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, அதற்குப் பதிலாக புதிய இலாகா பட்டியலை வழங்க உள்ளார். இந்த புதிய பட்டியலை உடனடியாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்து அரசாணையாக வெளியாகிறது.

என்ன பிரச்னை:: கடந்த கூட்டணி ஆட்சியில் தங்கள் கைவசம் இருந்த 'பவர்புல்' துறைகளை இந்த முறையும் அப்படியே பெற பா.ஜ., விரும்புகிறது. குறிப்பாக, பா.ஜ.,வைச் சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயம் வகித்து வந்த உள்துறை மற்றும் தொழில்துறை ஆகியவற்றை மீண்டும் பா.ஜ.,விற்கே ஒதுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றது.

ஆனால், முதல்வர் ரங்கசாமி அத்துறைக்கு பதிலாக வேறு புதிய இலாகாக்களை ஒதுக்கிப் பட்டியலைத் தயாரித்திருந்தார். இதனால் திருப்தியடையாத பா.ஜ., அமைச்சர்கள், முதல்வர் பங்கேற்ற அரசு விழாக்களில் பங்கேற்காமல் தவிர்த்து வந்தனர். சட்டசபை பக்கமும் அமைச்சர்கள் செல்லவில்லை.

முதல்வரும் தனது முடிவில் உறுதியாக இருந்ததால், அமைச்சர்கள் இலாகாக்கள் ஏதுமின்றி தொடரும் நிலை நீடித்தது. வரும் 8ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரி வரவுள்ள நிலையில், முதல்வர் ரங்கசாமி தனது முந்தைய முடிவை மாற்றிக்கொண்டுள்ளார். புதிய இலாகா பட்டியலை வழங்க உள்ளார். எனவே, பா.ஜ., எதிர்பார்க்கும் உள்துறை, தொழில்துறை உள்ளிட்ட முக்கிய இலாகாக்களை முதல்வர் விட்டுக்கொடுத்து, அவை பா.ஜ., அமைச்சர்களுக்குப் பிரித்து வழங்கப்படும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் கடந்த இரண்டு மாதங்களாக நீடித்து வந்த இலாகா ஒதுக்கீடு விவகாரம் முடிவுக்கு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us