ADDED : ஜன 29, 2025 05:39 AM
புதுச்சேரி : நகராட்சியில் சொத்துவரி, திடக்கழிவு அகற்றும் கட்டணத்தை செலுத்தி ஜப்தி நடவடிக்கைகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி செய்திக்குறிப்பு:
புதுச்சேரி நகராட்சிக்கு 2024-25ம் ஆண்டு வரை செலுத்த வேண்டிய சொத்துவரி மற்றும் திடக்கழிவு அகற்றும் கட்டணத்தை உடனே செலுத்தி வட்டி மற்றும் ஜப்தி நடவடிகையை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சொத்துவரி மற்றும் திடக்கழிவு அகற்றும் கட்டணத்தை பொதுமக்கள் செலுத்துவதற்கு ஏதுவாக வரும் 1ம் தேதி முதல் 28 ம் தேதி வரை சனிக்கிழமைகளிலும், மார்ச் 1 முதல் 31ம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறையின்றி செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி நகராட்சி கம்பன் கலை அரங்கம், முத்தியால்பேட்டை மார்க்கெட் வணிக வளாகம், நெல்லித்தோப்பு மற்றும் முதலியார்பேட்டை மேரி அலுவலகம் ஆகிய 4 இடங்களில் கணினி சொத்துவரி வசூல் மையங்கள் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செலுத்தலாம்.
சொத்துவரி செலுத்தாதவர்கள் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும். தவிர ரூ. 25 ஆயிரத்திற்கு மேல் சொத்து வரி நிலுவை வைத்திருப்பவர்கள் விவரம் நகராட்சி இணையதளத்தில் வெளியிடப்படும். அதன்பின்னும், வரியை செலுத்தாவிடில் அவர்களின் பெயர், முகவரி, நிலுவை தொகை ஆகிய விபரங்கள் அடங்கிய பட்டியல் அனைத்தும் நாளிதழ்களில் வெளியிடப்படும்.
மேலும் இணையதளம் https://lgrams.py.gov.in/propertytax மூலமாகவும், தங்களது சொத்து வரியை செலுத்தலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
