UPDATED : ஜூலை 23, 2026 05:14 PM
ADDED : ஜூலை 23, 2026 05:11 PM
புதுச்சேரி: ராகுல் படத்தை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காங்., கட்சியினர் போலீஸ் தலைமையகத்தில், மனு கொடுத்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்., கட்சியினர் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரத்திடம் கொடுத்த மனு:
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். வினாத்தாள் கசிவில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, டில்லி ஜந்தர்மந்தரில், போராட்டத்தில், ஈடுபட்ட காக்ரோச் ஜனதா கட்சியினரை போலீசார் தாக்கினர். இதனை கண்டித்து ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எம்.பி.,க்கள் கடந்த 21ம் தேதி பிரதமர் இல்லம் நோக்கி சென்றனர். அவர்கள் டில்லி போலீசாரால், கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டனர்.
இதற்கு எதிராக புதுச்சேரி காங்., கட்சி சார்பில், காமராஜர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மறுநாள் முன்னாள் சபாநாயகர் செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், அசோக்பாபு உள்ளிட்ட பா.ஜ.,வினர் காமராஜர் சிலை அருகில், ராகுலுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
அதில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் புகைப்படங்களை கிழித்து, அவரை அவமதித்தனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
