புதுச்சேரி : உழவர்கரை நகராட்சி நிரந்தர நகர்ப்புற சாலையோர விற்பனை குழு கலந்தாய்வு கூட்டம் ஜவகர் நகரில் உள்ள நகராட்சி கவுன்சில் கருத்தரங்க கூடத்தில் நடந்தது.
உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கர் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், குழு உறுப்பினர்கள், பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறை, மாநில வங்கி பிரதிநிதிகள், சுகாதாரத்துறை பிரதிநிதிகள், சுய உதவி குழு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், உழவர்கரை நகராட்சி எல்லைக்குட்பட்ட சாலையோர வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு, தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சுயஉதவி குழுக்கள் ஆரம்பிப்பது, சாலையோர வியாபாரிகளுக்கான சிறப்பு குழு அமைப்பது, வாகனங்களில் வியாபாரம் நடத்துபவர்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

