/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'15 ஆண்டுகளாக ஒரு பள்ளி கட்டடம் கட்ட முடியவில்லை'
/
'15 ஆண்டுகளாக ஒரு பள்ளி கட்டடம் கட்ட முடியவில்லை'
ADDED : டிச 07, 2024 07:13 AM
முதல்வர் ரங்கசாமி ஆதங்கம்
புதுச்சேரி: அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளை விமர்சித்த முதல்வர் ரங்கசாமி, 15 ஆண்டுகளாக ஒரு பள்ளி கூடம் கட்ட கூறியும் முடியவில்லை என, ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்.
பணியாளர் நலம் மற்றும் நிர்வாக சீர்த்திருத்த துறை சார்பில் நடந்த விழாவில், அவர், பேசியதாவது;
நிர்வாகத்தின் செயல்பாடு விரைவாக இருப்பது தான் நிர்வாக சீர்த்திருத்தம். பிரதமர் மோடி, நாட்டிற்கு விரைவான வளர்ச்சியை கொண்டு வந்துள்ளார். அதை தான் நான் இங்கு எதிர்பார்க்கிறேன்.
ஒரு துறையில் பணியாற்றும் அதிகாரி ஒரு விஷயத்தை முடியும் என, கூறுகிறார். அதே அதிகாரி வேறு துறைக்கு செல்லும்போது முடியாது என, கூறினால், திட்டத்தை எப்படி முடிக்க முடியும்.
ஒரு பள்ளியில் ஆண்டு தோறும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், புதிய பள்ளி கட்டடம் கட்ட வேண்டும் என, நான் எம்.எல்.ஏ.,வாக, அமைச்சராக, முதல்வராக இருந்து கூறியும், அதற்கான இடத்தை காண்பித்தும் 15 ஆண்டுகளாக கட்ட முடியவில்லை.
அப்படி இருந்தால் எப்படி முன்னேற்றம் கிடைக்கும். அதிகாரிகள் செயல்பாடு மக்களுக்கான பயன்கள் விரைவாக செல்லும் வகையில் இருக்க வேண்டும்.
மத்திய அமைச்சர் பல முறை தொடர்பு கொண்டு சாலை பணிகளை முடிக்க வேண்டும் என கூறிவிட்டார். சாலை பணிக்கு தேவையான மண் இல்லை. ஆனால், எங்கு உள்ளது, எப்படி முடிக்க வேண்டும் என தெரிந்தும், சாலை பணியை முடிக்க முடியவில்லை.
புதுச்சேரியில் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த தற்போது உள்ள இடத்தை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என கூறினேன். 4 ஆண்டுகள் கடந்தும் செய்யமுடியவில்லை.
காலி பணியிடங்கள் நிரப்படும் என வாக்குறுதி அளித்தேன். எவ்வளவோ பேர் வேலையின்றி உள்ளனர். 10 ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்க முடியும். பணியிடங்களும் உள்ளது. காலி பணியிடங்களை நிரப்பினால் பணிகள் விரைவாக நடக்கும்.
பொதுப்பணித்துறையில் ஜே.இ., பணி நிரப்ப முடிகிறது. மின்துறையில் நிரப்ப முடியவில்லை. துறை இயக்குநரிடம் கேட்டால், ஆட்கள் இல்லை என கூறுகிறார்.
அரசு முடிவு செய்து பணியிடம் நிரப்ப கூறுகிறது. அதை நிரப்ப என்ன சிரமம். எப்படி எளிதாக நிரப்ப முடியும் என, தெரிந்து நிரப்ப வேண்டும். வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது அரசின் எண்ணம். அதற்கு ஏற்ப அதிகாரிகளுக்கும் பணிகளை செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும்.
குறைவான காலத்தில் மக்களுக்கு பணியாற்றி வளர்ச்சி கொண்டுவர முடியும் என நினைக்க வேண்டும். அதனால் விரைவான செயல்பாடு அவசியம்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.