/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் வேகமாக பரவும் போலி எஸ்.பி.ஐ., வங்கி 'லிங்க்' உஷாராக இருக்க சைபர்கிரைம் போலீசார் எச்சரிக்கை
/
புதுச்சேரியில் வேகமாக பரவும் போலி எஸ்.பி.ஐ., வங்கி 'லிங்க்' உஷாராக இருக்க சைபர்கிரைம் போலீசார் எச்சரிக்கை
புதுச்சேரியில் வேகமாக பரவும் போலி எஸ்.பி.ஐ., வங்கி 'லிங்க்' உஷாராக இருக்க சைபர்கிரைம் போலீசார் எச்சரிக்கை
புதுச்சேரியில் வேகமாக பரவும் போலி எஸ்.பி.ஐ., வங்கி 'லிங்க்' உஷாராக இருக்க சைபர்கிரைம் போலீசார் எச்சரிக்கை
ADDED : டிச 31, 2024 04:45 AM
புதுச்சேரி : ''எஸ்.பி.ஐ., பெயரில் போலியாக உலாவும் வாட்ஸ்ஆப் லிங்கினை தொட்டால், உங்களது வங்கி கணக்கில் இருந்து பணம் பறிபோய்விடும்'' என சைபர் கிரைம்போலீசார் எச்சரித்துள்ளனர்.
புதுச்சேரியில் வாட்ஸ்ஆப் குழுக்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.,) வங்கி பெயரில், ஏ.பி.கே., பைலுடன் கூடிய லிங்க் பரவி வருகிறது. அதில், ''உங்கள் வங்கி கணக்கில் 7 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.
அதை, லிங்கை திறந்து பெற்றுக்கொள்ளுங்கள். எஸ்.பி.ஐ. பரிசு புள்ளிகளை பணமாக்கி கொள்ளுங்கள், உங்கள் ஆதார் எண்ணை வங்கி எண்ணுடன் இணைத்துக் கொள்ளுங்கள்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த லிங்கை தொட்டு, ஏ.பி.கே., பைலை திறந்ததும், வாட்ஸ்ஆப் குழுக்களின் ஐகான்கள் மற்றும் பெயர்கள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா' என மாறி விடுகின்றது.
அடுத்த சில நிமிடங்களில், நாம் எந்தெந்த வாட்ஸ்ஆப் குழுக்களில் இணைந்து உள்ளோமோ அந்த குழுக்களுக்கும் அந்த லிங்க் பரவுகிறது. அந்த குழுவில் இருக்கும் யாராவது ஏ.பி.கே பைலை திறந்தால், அடுத்து வேறு குழுக்களுக்கும் இதேபோல் பரவி வருகின்றது.
மோசடியான இந்த எஸ்.பி.ஐ., பைலை திறக்க வேண்டாம் என்று புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:
எஸ்.பி.ஐ., வங்கி பெயரில் பரவும் ஏ.பி.கே., பைல் மால்வேராக செயல்படுகின்றது. இதனை திறந்து டவுன்லோடு செய்தால், உங்களுடைய மொபைல்போன் ஹாக் செய்யப்பட்டுவிடும்.
இந்த மால்வேர் முக்கியமான தகவல்களான வங்கி விவரங்கள், பாஸ்வேர்டு, மற்றும் ஓ.டி.பி.க்களை திருடிவிடும்.
அத்துடன் பிற வாட்ஸ்ஆப் குழுக்கள் உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகளுக்கும் அணுகலை பெற்று, மீண்டும் இந்த இணைய மோசடியை தொடர செய்துவிடும்.
இந்த ஏ.பி.கே. பைலை திறந்ததும் வங்கி விவரங்களை பதிவிட்டபின், அவர்கள் தங்கள் மொபைலில் அனுப்பப்படும் ஓ.டி.பியை பதிவு செய்ய 2 முறை நுழைய கேட்டுக்கொள்ளப்படுவர்.
இந்த ஓ.டி.பி., பரிவர்த்தனையை தெரிந்து கொள்ளும் சைபர் கும்பல், உங்களது வங்கி கணக்கில் அனுமதியில்லாமல் நிதியை மாற்றவோ அல்லது பிற மோசடி நடவடிக்கைகளைச் செய்யவோ முடியும். வங்கி கணக்கில் இருந்து பணம் பறிபோய் விடும். எனவே சந்தேகமான இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம். தெரியாத தொடர்புகளில் இருந்து ஏ.பி.கே. கோப்புகளை டவுன்லோடு செய்ய வேண்டாம்.
குழுவின் ஐகான்கள் அல்லது பெயர்களில் அனுமதியற்ற மாற்றங்களை கவனித்தால், குழு நிர்வாகிக்கு அறிவிக்க வேண்டும், அவசியமென்றால் குழுவிலிருந்து விலகிவிட வேண்டும். இத்தகைய போலி லிங்க் மூலம் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது சந்தேகத்திற்குரிய நடவடிக்கையை கண்டறிந்தால், தொலைபேசி உதவி எண் 1930ஐ அழைக்கலாம், www.cybercrime.gov.in என்ற இணையத்திலும் புகாரளிக் கலாம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.