/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் ரொக்க பரிசு குறித்து இன்று முடிவு! முதல்வர் ரங்கசாமி, அதிகாரிகளுக்கு அவசர அழைப்பு
/
புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் ரொக்க பரிசு குறித்து இன்று முடிவு! முதல்வர் ரங்கசாமி, அதிகாரிகளுக்கு அவசர அழைப்பு
புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் ரொக்க பரிசு குறித்து இன்று முடிவு! முதல்வர் ரங்கசாமி, அதிகாரிகளுக்கு அவசர அழைப்பு
புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் ரொக்க பரிசு குறித்து இன்று முடிவு! முதல்வர் ரங்கசாமி, அதிகாரிகளுக்கு அவசர அழைப்பு
UPDATED : ஜன 12, 2026 05:49 AM
ADDED : ஜன 12, 2026 03:39 AM

புதுச்சேரி: புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் ரொக்க பரிசு தொடர்பாக இன்று முக்கிய முடிவெடுக்கப்பட உள்ளது. இது தொடர்பாக விவாதிக்க முதல்வர் ரங்கசாமி, உயர் அதிகாரிகளுக்கு கவர்னர் கைலாஷ்நாதன் அவசர அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் 3 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி அரசும் பொங்கல் ரொக்க பரிசு வழங்க திட்டமிட்டுள்ளது. போதிய நிதி இல்லாத சூழ்நிலையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மொபைலில் பேசிய முதல்வர் ரங்கசாமி, அப்படியே அமைச்சர் லட்சுமிநாராயணன் மூலமாக மனுவாக கொடுத்து பொங்கல் ரொக்க பரிசு தொடர்பாக வலியுறுத்தி இருந்தார்.
இருப்பினும், பொங்கல் ரொக்க பரிசு தொடர்பாக கவர்னர் மாளிகைக்கு சென்ற கோப்பு அதே வேகத்தில் திரும்பி வந்தது. இது ஆளும் கட்சிக்கு கடும் அதிர்ச்சியளித்தது. அவ்வளவு பெரிய மாநிலமான தமிழகத்திலேயே முன் கூட்டியே பொங்கல் ரொக்க பரிசு வழங்கப்பட்ட சூழ்நிலையில், சிறிய மாநிலமான புதுச்சேரியில் காலம் கடந்து பொங்கல் பரிசு வழங்குவது சட்டசபை தேர்தல் நேரத்தில் சரியாக இருக்காது.
எனவே விரைவாக நிதி ஒதுக்கி கொடுங்கள் என்று மத்திய அரசிடம் முதல்வர் ரங்கசாமி அழுத்தமாக மனுவின் மூலம் வலியுறுத்தி இருந்தார். பொங்கல் ரொக்க பரிசு விவகாரம் மத்திய அரசின் கதவினை தட்டிய நிலையில், புதுச்சேரி மக்களுக்கு வழங்கப்பட உள்ள பொங்கல் ரொக்க பரிசு தொடர்பாக இன்று முக்கிய முடிவெடுக்கப்பட உள்ளது. இது தொடர்பாக விவாதிக்க முதல்வர் ரங்கசாமி, தலைமை செயலர் சரத் சவுன்கான், நிதித் துறை செயலர் உயர் அதிகாரிகளை கோப்புகளுடன் நேரில் வந்து சந்திக்குமாறு கவர்னர் கைலாஷ்நாதன் அவசர அழைப்பு விடுத்துள்ளார்.
தலைமை செயலர் சரத் சவுன்கான் தொடர் விடுமுறையில் சொந்த ஊர் சென்றுள்ள சூழ்நிலையில் அவர் 18 ம்தேதி தான் புதுச்சேரி திரும்புகிறார். இதனால் ரொக்க பரிசு குறித்து இப்போதைக்கு வாய்ப்பில்லை என கூறப்பட்டது. மேலும், பொங்கல் பண்டிகை முடிந்த பின் தான் ரொக்கப்பரிசு குறித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், கவர்னரின் இந்த அவசர அழைப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. சொந்த ஊர் சென்றுள்ள தலைமை செயலர் சரத் சவுகான் வீடியோ கான்பரஸில் இணைந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
புதுச்சேரி அரசு 5 ஆயிரம் ரூபாய் பொங்கல் ரொக்க பரிசு வழங்க முடிவு செய்திருந்தது. ஏற்கனவே, 750 ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருவதால், 4 ஆயிரம் ரூபாய் பொங்கல் ரொக்க பரிசாக வழங்கப்பட உள்ளது. இது பற்றி இன்று இறுதி முடிவெடுக்கப்பட்டதும், உடனடியாக ஒரிரு தினங்களில் அனைவரது வங்கி கணக்கில் கணக்கில் செலுத்த அனைத்து ஏற்பாடுகளையும் குடிமை பொருள் வழங்கல் துறை முடுக்கிவிட்டுள்ளது. ஒப்புதல் கொடுக்க நிதித் துறையும் ரெடியாக உள்ளது.

