நெல்லித்தோப்பு மார்க்கெட் சந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை
நெல்லித்தோப்பு மார்க்கெட் சந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை
ADDED : ஆக 13, 2026 10:52 PM
புதுச்சேரி: நெல்லித்தோப்பு மார்க்கெட் சந்தை சீரமைத்து போக்குவரத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லித்தோப்பு பகுதியில், மார்க்கெட் சந்து உள்ளது. இங்கு மார்க்கெட் பரபரப்பாக இயங்கிய காலத்தில், பொதுமக்கள் அருகில் உள்ள இந்த சாலையை பொருட்கள் வாங்கவும், வியாபாரிகள் தங்கள் பொருட்களை கொண்டு வரவும் பயன்படுத்தினர்.
இந்நிலையில், வாகனங்கள் பெருக்கம், இடப்பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், அப்பகுதியில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், அவதிப்பட்டு வந்த மக்கள், மார்க்கெட்டை அப்பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கையை ஏற்று மார்க்கெட் அங்கிருந்து, அகற்றப்பட்டது. இதனால், எப்போதும் பிசியாக காணப்பட்ட மார்க்கெட் சந்து பல ஆண்டுகளாக பயன்பாடின்றி பாழாகி உள்ளது. அங்கு சாக்கடைகள் தேங்கியும், குப்பைகள் குவிந்தும் கடும் துர்நாற்றத்துடன் நோய் பரப்பும் பகுதியாக காட்சியளிக்கிறது.
எப்போதும், பரபரப்பாக காணப்படும் காரணமணிக்கும் மெயின் ரோட்டின் அருகில் தான், இந்த மார்க்கெட் சந்து அமைந்துள்ளது. எனவே, இச்சாலையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால், அப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக அமையும்.
எனவே, 300 மீட்டர் நீளமுள்ள மார்க்கெட் சந்தை குப்பை கொட்டும் இடமாக மாற்றாமல், இருபுறமும் சீரமைத்து, போக்குவரத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
