/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நிர்வாக வசதிக்காக குடிமை பொருள் வழங்கல் துறை... பிரிக்கப்படுமா? கிளை அலுவலகங்கள் கிராமத்திற்கு சென்றால்தான் தீர்வு
/
நிர்வாக வசதிக்காக குடிமை பொருள் வழங்கல் துறை... பிரிக்கப்படுமா? கிளை அலுவலகங்கள் கிராமத்திற்கு சென்றால்தான் தீர்வு
நிர்வாக வசதிக்காக குடிமை பொருள் வழங்கல் துறை... பிரிக்கப்படுமா? கிளை அலுவலகங்கள் கிராமத்திற்கு சென்றால்தான் தீர்வு
நிர்வாக வசதிக்காக குடிமை பொருள் வழங்கல் துறை... பிரிக்கப்படுமா? கிளை அலுவலகங்கள் கிராமத்திற்கு சென்றால்தான் தீர்வு
ADDED : ஜூலை 18, 2024 08:42 AM

புதுச்சேரி : குடிமை பொருள் வழங்கல் துறையினை பிரித்து கிளை அலுவலகங்கள் கிராமப்புறங்களுக்கு கொண்டு சென்றால் தான், பொதுமக்களுக்கு எளிதாக சேவை கிடைக்கும்.
புதுச்சேரி மாநிலத்தில் 1,67,353 மஞ்சள் ரேஷன் கார்டுகள், 1,86,397 சிவப்பு ரேஷன் கார்டுகள் என மொத்தம் 3,50,750 ரேஷன்கார்டுகள் உள்ளன. பெயர் நீக்கம், பெயர் சேர்ப்பு, புதிய ரேஷன் கார்டு தேவைக்காக தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள குடிமை பொருள் வழங்கல் துறையை பொதுமக்கள் நாடுகின்றனர். ஆனால், அத்துறை வளாகத்தில் அவ்வளவு சுலபத்தில் சேவைகள் கிடைப்பதில்லை.
அடிக்கடி முற்றுகை
புதிய ரேஷன் கார்டு அல்லது சிவப்பு ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தால் அவ்வளவு தான். நடையாய் நடந்தாலும் கிடைக்காது. போதிய ஆட்கள் இல்லாமல், இடவசதியும் இல்லாமல், குவியும் பொதுமக்களின் மனுக்களை சமாளிக்க முடியாமல் குடிமை பொருள் வழங்கல் துறை திணறி வருவதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. பொதுமக்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் எம்.எல்.ஏக்களும், அரசியல் கட்சியினர் அடிக்கடி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காலத்திற்கேற்ப அவசியம்
காலத்துகேற்ப குடிமை பொருள் வழங்கல் துறை கிளை அலுவலகங்களாக பிரித்து கிராமத்திற்கு கொண்டு சென்றால் தான் நிரந்தர தீர்வு கிடைக்கும். மக்களுக்கு விரைவான சேவை கிடைக்கும்.
மாநிலத்தில் மொத்தமுள்ள 3,50,750 ரேஷன் கார்டுகளில் புதுச்சேரியில் 2,64,779, காரைக்கால் 61,058, மாகி 8,476, ஏனம் 16,437 ரேஷன்கார்டுகள் உள்ளன.
மொத்தமுள்ள ரேஷன் கார்டுகளில் 75.4 சதவீதம் புதுச்சேரி பிராந்தியத்தில் தான் உள்ளது. புதுச்சேரியில் உள்ள குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தினை காலத்துகேற்ப கிளை அலுவலகங்களாக பிரிப்பது அவசியமாக உள்ளது.
உதாரணம் இருக்கும்
கடந்த காலங்களில், போக்குவரத்து துறையில் வாகனங்கள் அதிகரித்த போது பதிவு செய்ய சமாளிக்க முடியாமல் திணறியது. அதை தொடர்ந்து சாரம் என பல்வேறு இடங்களில் ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் பிரித்து கொண்டு செல்லப்பட்ட போது பிரச்னை தீர்ந்தது. அதேபோல், போக்குவரத்து காவல் துறையில் வழக்குகள் குவிந்தபோதும் சிக்கல் ஏற்பட்டது. அதை தொடர்ந்து கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என போக்குவரத்து காவல் துறை பிரிக்கப்பட்டதும், பிரச்னை தீர்ந்தது. பொதுமக்களுக்கு எளிதாக சேவை கிடைத்தது.
நிர்வாக சிக்கல் தீரும்
எனவே, குடிமை பொருள் வழங்கல் துறையை கிளை அலுவலகங்களாக பிரிப்பது எந்த சிக்கலை ஏற்படுத்தாது.
குடிமை பொருள் வழங்கல் துறையை கிராமங்களுக்கு கொண்டு சென்றால் கிராமப்புற மக்களுக்கு எளிதாக சேவை கிடைப்பதோடு, நிர்வாக சிக்கல்கள் அனைத்துமே தீரும்.
புதுச்சேரியை அடுத்து வளர்ந்துள்ள பகுதியாக உள்ள வில்லியனுார், வெகு தொலைவில் உள்ள நெட்டப்பாக்கம், பாகூர் பகுதிகளை மையமாக வைத்து குடிமை பொருள் வழங்கல் கிளை அலுவலகங்களை கொண்டு செல்லலாம்.
இதற்கான அறிவிப்பினை பட்ஜெட்டில் அரசு வெளியிட வேண்டும்.