சென்டாக் பி.ஆர்க் படிப்பிற்கான நேரடி கலந்தாய்வு அறிவிப்பு
சென்டாக் பி.ஆர்க் படிப்பிற்கான நேரடி கலந்தாய்வு அறிவிப்பு
ADDED : செப் 15, 2026 08:31 PM
புதுச்சேரி: மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி பி.ஆர்க் படிப்பிற்கான நேரடி கலந்தாய்வு வரும் 18ம் தேதி மதியம் 2 மணி முதல் நடைபெறவுள்ளது.
கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணிமண்டப வளாகத்தில் இயங்கி வரும் சென்டாக் அலுவலகத்தில் இந்த நேரடி கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டா அல்லது ஜே.இ.சி., ஆர்க் நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கைக்குத் தகுதி பெறுவர்.
இந்தக் கலந்தாய்வு நிலைகளின் அடிப்படையில் வரிசையாக நடத்தப்படும். முதல்கட்டமாக மதியம் 2 மணிக்கு, புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த சென்டாக்கில் ஏற்கனவே விண்ணப்பித்த மாணவர்களுக்குக் கலந்தாய்வு நடைபெறும்.
தொடர்ந்து, காலியிடங்கள் இருக்கும் பட்சத்தில், மாலை 2:30 மணிக்கு புதுச்சேரியைச் சேர்ந்த சென்டாக்கில் விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும். பிற மாநில மாணவர்களுக்கான கலந்தாய்வு, புதுச்சேரி மாநில மாணவர்களின் கலந்தாய்வு முடிந்த பிறகே பரிசீலிக்கப்படும். அந்த வகையில், காலியிடங்கள் இருப்பின் மாலை 2:45 மணிக்கு சென்டாக்கில் விண்ணப்பித்த பிற மாநில மாணவர்களுக்கும், மாலை 3:00 மணிக்கு சென்டாக்கில் விண்ணப்பிக்காத பிற மாநில மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்படும்.
கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவர்கள் தங்களின் விண்ணப்பப் படிவ நகல், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், நாட்டா மதிப்பெண் சான்றிதழ், புதுப்பிக்கப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் ஆகியவற்றைக் கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
மேலும், சென்டாக் இணையதளத்தில் காலியிடங்களின் விவரங்களைச் சரிபார்த்த பின்னரே கலந்தாய்விற்கு வர வேண்டும் என்றும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக மட்டுமே வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு பதிவு செய்யும் மாணவர்கள் சேர்க்கைக்கு உரிமை கோர முடியாது. இது தொடர்பான தகவல்கள் மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலமாகவும் அனுப்பப்பட்டு வருகின்றன. கூடுதல் விவரங்களை www.centacpuducherry.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது 0413-2655570, 2655571 என்ற உதவி எண்களைத் தொடர்பு கொண்டோ தெரிந்துகொள்ளலாம்.
