ADDED : டிச 08, 2024 05:24 AM

புதுச்சேரி : தீபாவளி சீட்டு நடத்தி ரூ.16.58 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி அடுத்த தமிழகப் பகுதியான வானுார், நாராயணப்புரத்தை சேர்ந்தவர் புருேஷாத்தமன், தனியார் நிறுவன ஊழியர். இவர், மனைவி கீதாவுடன் இணைந்து தீபாவளி நகை சீட்டு நடத்தி வந்தார்.
சீட்டில் சேர்பவர்களுக்கு 2 கிராம் தங்க நாணயம், 10 கிராம் வெள்ளி மற்றும் ரூ.3 ஆயிரம் மதிப்பிலான மாளிகை பொருட்கள் வழங்குவதாக கூறினர்.இதைநம்பி கரசூர் பகுதியை சேர்ந்த 132 பேர் ரூ.16 லட்சத்து 58 ஆயிரம் வரை தீபாவளி சீட்டு கட்டினர்.
ஆனால், தீபாவளி பண்டிகை முடிந்தும், அவர்கள் கூறியபடி பொருட்கள் ஏதுவும் வழங்கவில்லை. இதையடுத்து, சீட்டு கட்டியவர்கள் புருேஷாத்தமன் வீட்டிற்கு சென்று கேட்டபோது, சில தினங்களில் தருவதாக கூறினர்.
இந்நிலையில்,கணவன், மனைவி வீட்டை பூட்டி விட்டு தலை மறைவாகினர்.
இதனால், பாதிக்கப்பட்ட சாந்தி என்பவர் அளித்த புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து, புருேஷாத்தமன், கீதா ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
