/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
யு.பி.ஐ., இல்லையென்றால் இரட்டிப்பு கட்டணம்
/
யு.பி.ஐ., இல்லையென்றால் இரட்டிப்பு கட்டணம்
ADDED : பிப் 05, 2026 05:40 AM
புதுச்சேரி: சுங்கச்சாவடிகளில் மூன்று விதமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் கார், பஸ், லாரி போன்ற வாகனங்களுக்கு ஒரு வழி மற்றும் இரு வழி பயணங்களுக்கான கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. சுங்கச்சாவடியை கடக்கும் வாகனங்கள் 'பாஸ்டேக்' வைத்திருந்தால் கட்டணம் தானாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
'பாஸ்டேக்' இல்லாத வாகனங்கள் கட்டணம் செலுத்திவிட்டு கடக்கலாம். இதற்கு இரு வகையான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜிபே, போன் பே போன்ற யு.பி.ஐ., பரிவர்த்தனை மூலமாக பணம் செலுத்துபவர்களுக்கு ஒருவிதமான கட்டணமும், ரொக்கமாக பணம் செலுத்துபவர்களுக்கு இரு மடங்கு கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, ஒரு சுங்கச்சாவடியில் காருக்கு 'பாஸ்டேக்' முறையில் ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்பட்டால், 'பாஸ்டேக்' இல்லாதவர்கள் யு.பி.ஐ., மூலமாக (ஜிபே, போன் பே) பணம் செலுத்தினால் 1.25 சதவீதம் அபராதமாக சேர்த்து, ரூ. 125 வசூலிக்கப்படுகிறது. ஆனால், யு.பி.ஐ., இல்லாமல், ரொக்கமாக பணம் செலுத்தினால் இரட்டிப்பு கட்டணமாக ரூ.200 வசூல் செய்கின்றனர்.
ஒரே சேவைக்கு இரண்டு விதமான கட்டணம் வசூலிக்கப்படுவது என்ன நியாயம் என்று வாகன ஓட்டிகள் புலம்பியபடி செல்கின்றனர்.
சுங்கச்சாவடி அதிகாரிகள் கூறும்போது, 'மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் சுங்கச்சாவடி கட்டணத்தை ஒழுங்குப்படுத்துகிறது. பணமில்லாத பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் நாடு முழுவதும் இதே நடைமுறை தான் உள்ளது. 'பாஸ்டேக்' இல்லாமல் யு.பி.ஐ., மூலம் கட்டினால் 1.25 சதவீதம் கூடுதலாகவும், ரொக்கமாக கட்டினால் 2 மடங்கு கட்டணமும் தான் வசூலிக்கப்படுகிறது. வாகன ஓட்டிகள் பாஸ்டேக்கிற்கு மாறுவதன் ஒரே வழி' என்றார்.

