பாரம்பரிய நாடகக் கலையில் கல்விசார் தெருக்கூத்து பயிற்சி
பாரம்பரிய நாடகக் கலையில் கல்விசார் தெருக்கூத்து பயிற்சி
ADDED : மே 29, 2026 03:25 AM

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் நாடகக் கலைத்துறை, டில்லி தேசிய நாடகப் பள்ளி ஆகியன சார்பில், 'இந்திய பாரம்பரிய நாடக மரபில் தெருக்கூத்து தயாரிப்பு பயிற்சி முகாம்' பல்கலைக்கழக கருத்தரங்கு மையத்தில் நடந்தது.
பல மாநிலங்களைச் சேர்ந்த தேசிய நாடகப் பள்ளி மாணவர்களின் 'திரவுபதி வச்திராபரணம்' எனும் பாரம்பரிய தெருக்கூத்து பயிற்சி முகாம் நடந்தது. பத்மஸ்ரீ புரிசை கண்ணப்ப சம்பந்தன் தலைமைக் குருவாகவும், பழனி முருகன் உதவி குருவாகவும் பயிற்சி வழங்கினர்.
இதில் தெருக்கூத்து மரபின் உடலசைவு, முகபாவனை, இசை, நடிப்பு, பாத்திர வடிவமைப்பு, ஆடை அமைப்பு மற்றும் பாரம்பரிய அரங்கேற்ற முறை ஆகியவை குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
முகாமிற்கு, பல்கலைக்கழக துணைவேந்தர் பிரகாஷ்பாபு தலைமை தாங்கினார். புதுச்சேரி பல்கலைக்கழக பதிவாளர் குணசேகரன் மாணவர்களின் மேடை ஆற்றல், ஈடுபாடு மற்றும் குறுகிய காலத்தில் பாரம்பரிய நாடக வடிவ திறனை பாராட்டினார்.
நிதி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி நிகழ்ச்சியின் பின்னணியில் செயல்பட்ட குருக்கள், இசைக் கலைஞர்கள், பாரம்பரிய கலைஞர்கள் மற்றும் மாணவர் நடிகர்களின் அர்ப்பணிப்பை பாராட்டினார். கலைப்புல முதல்வர் மார்க்ஸ் பயிற்சி முகாம் பாரம்பரிய நாடகக் கலைகளை கல்விசார் முறையில் வலுப்படுத்தும் முக்கிய முயற்சி எனக் குறிப்பிட்டார்.
பிரபல நாடக ஆளுமை முருகபூபதி, தெருக்கூத்தின் இயல்பையும், அழகியலையும் பாதுகாத்து மாணவர்களுக்கு பயிற்சி வழங்கிய குருக்கள் மற்றும் மாணவர்களின் அர்ப்பணிப்பையும், டில்லி பல்கலைக்கழக முன்னாள் முதல்வர் ரவீந்திரன், தேசிய நாடகப் பள்ளி மற்றும் பல்கலைக்கழகத்தின் கல்விசார் இணைப்பை பாராட்டினர்.
பேராசிரியர்கள் முருகவேல், பிரியங்கா சர்மா, தேசிய நாடகப் பள்ளி ஆசிரியர் ஜெயபிரகாஷ், முன்னாள் மாணவர்கள் துயவர்மன், பாலபழனி, பத்மபிரியா, அருணகிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆய்வாளர்கள் பாலசுப்ரமணியன், பிரேம்நாத், மாதவி காளியம்பத் தொகுத்து வழங்கினர்.
