விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சி : கவர்னர், அமைச்சர் பங்கேற்பு
விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சி : கவர்னர், அமைச்சர் பங்கேற்பு
ADDED : ஜூன் 22, 2026 03:48 AM

புதுச்சேரி: புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில், விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சி பி.எஸ்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
சிறப்பு அழைப்பளராக கவர்னர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு, விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சியை துவக்கி வைத்து விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அமைச்சர் நமச்சிவாயம், சாய் சரவணன் எம்.எல்.ஏ., தலைமை செயலர் சரத் சவுகான், அரசு செயலர் சவுத்ரி முகமது யாசின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மத்திய அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்களின் பயன்கள் குறித்து, விவசாயிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்போர் கலந்து கொண்டு, துறை சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் அலுவலர்களுடன் நேரடியாக விளக்கங்களை கேட்டறிந்தனர்.
பொதுமக்களின் சந்தேகங்களுக்கு சம்பந்தப்பட் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், உற்பத்தி செய்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் துறை சார்ந்த கண்காட்சிகள் நடந்தது.
கண்காட்சியில் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில், புதுச்சேரியின் பாரம்பரிய மலரான நாட்டு முத்துமல்லி தொடர்பாக சிறப்பு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் நாட்டு முத்துமல்லியின் சிறப்பம்சங்கள், அதன் பொருளாதார முக்கியத்துவம் மற்றும் அதற்கு புவிசார் குறியீடு பெறுவதன் அவசியம் குறித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வேளாண்துறையின் தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ் 50 விவசாயிகளை உள்ளடக்கிய மலர் சாகுபடி குழுமம் உருவாக்கப்பட்டது.
ஏற்பாடுகளை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, கால்நடை நலத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆகிய துறைகளின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
