இடைத்தேர்தலில் முதல்வரின் வியூகங்கள் எடுபடாது: மாஜி முதல்வர் நாராயணசாமி ஆவேசம்
இடைத்தேர்தலில் முதல்வரின் வியூகங்கள் எடுபடாது: மாஜி முதல்வர் நாராயணசாமி ஆவேசம்
UPDATED : செப் 16, 2026 10:42 PM
ADDED : செப் 16, 2026 07:44 PM
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் முதல்வரின் வியூகங்கள் எடுபடாது என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
அவர், கூறியதாவது:
சமூகநீதி மதசார்பற்ற வெற்றி கூட்டணயில் விநாயகம் மனு தாக்கல் செய்துள்ளார். காங்., ஆதரவாக த.வெ.க., வி.சி.க., ம.தி.மு.க., இந்திய முஸ்லிம் லீக் உள்ளனர். கடந்த 2021 தேர்தலில் முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடியில் போட்டியிட்டு வெற்றி பெற்றபின், தொகுதி பக்கம் செல்லவில்லை.
இந்த தொகுதியில், விளையாட்டு மைதானம், சாலை, குடிநீர் பிரச்னை உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. அதன் பின் நடந்த 2024 லோக்சபா தேர்தலில், வைத்திலிங்கம் இங்கு 3 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்றார்.
முதல்வர் இரண்டு தொகுதிகளில் நிற்கவேண்டிய அவசியமில்லை. அவர் தோல்வி பயத்தின் காரணமாக இரண்டு தொகுதிகளில் நின்றார். தட்டாஞ்சாவடியில் ராஜினாமா செய்துவிட்டார். கடந்த சட்டசபை தேர்தலில் வைத்திலிங்கம் தோற்க கூட்டணியில் இருந்த குழப்பமே காரணம்.
இது ரங்கசாமியால் திணிக்கப்பட்ட தேர்தல். இந்த தேர்தலில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகசாமாக உள்ளது. இந்த தேர்தலில் முதல்வரின் வியூகங்கள் எடுபடாது. இந்த நான்கு மாத ஆட்சியில், ஊழல் அதிகரித்துள்ளது. மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
மகளிர் உதவித்தொகை உரியவர்களிடம் செல்லவில்லை. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கஞ்சா, அபின் தாராளமாக புழங்குகிறது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை. தற்போது, என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணி கட்சி வேட்பாளர் பணபலத்தை நம்பி நிற்கிறார். அவரின் பின்னணி மக்களுக்கு நன்றாக தெரியும். காங்., கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகசமாக உள்ளது' என்றார்.
