தட்டஞ்சாவடி இடைத் தேர்தலில் போட்டியிட 15 பேர் மனு தாக்கல்: மனுவை வாபஸ் பெற கடைசி நாள்
தட்டஞ்சாவடி இடைத் தேர்தலில் போட்டியிட 15 பேர் மனு தாக்கல்: மனுவை வாபஸ் பெற கடைசி நாள்
UPDATED : செப் 16, 2026 10:43 PM
ADDED : செப் 16, 2026 07:43 PM
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், கடைசி நாளான நேற்று பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் தலைவர்களுடன் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தனர்.
தட்டாஞ்சாவடி இடைத்தேலுக்கான அறிவிப்பு கடந்த 9ம் தேதி அதிகாரப்பூர்வ வெளியாகி மனுதாக்கல் தொடங்கியது. தொடக்க நாட்களில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. தொடர்ந்து 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகள் விடுமுறை நாட்கள் என்பதால் மனுத்தாக்கல் இல்லை. 15-ம் தேதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திக்குமாரி, 40, சுயேச்சை வேட்பாளர் வசந்தி 48, ஆகிய இருவர் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தனர்.
இறுதி நாளான நேற்று மனு தாக்கல் களை கட்டியது. அரசியல் கட்சி வேட்பாளர்கள் மாநில நிர்வாகிகள், தொண்டர்களும் புடைசூழ வந்து மனு தாக்கல் செய்தனர். சுயேச்சைகளும் தங்களது ஆதரவாளர்களுடன் வந்து மனு தாக்கல் செய்தனர். இதனால் தட்டாஞ்சாவடி பகுதியே ஊர்வலம், பேரணியால் குலுங்கியது.
தி.மு.க.: தி.மு.க., வேட்பாளர் சேதுசெல்வம் 54, தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை அருகில் இருந்து மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ., மக்கள் நீதி மய்யம், தே.மு.தி.க., உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினருடன் ஊர்வலமாகப் புறப்பட்டார். காலை 11:15 மணிக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தை அடைந்த அவர், தி.மு.க., தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி., மாநில அமைப்பாளர் சிவா ஆகியோர் முன்னிலையில் காலை 11:20 மணிக்கு மனு தாக்கல் செய்தார்.
காங்.: காங்., வேட்பாளர் விநாயகம், 50, ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து 11:25 மணிக்கு ஊர்வலமாக வந்தார். காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, எம்.எல்.ஏ.,க்கள் நேரு, சாய்சரவணன்குமார், கார்த்திகேயன், ராமு மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் காலை 11:30 மணிக்கு மனு தாக்கல் செய்தார்.
இ.கம்யூ.: இந்திய கம்யூ., வேட்பாளர் சலீம் 64, கொக்குபார்க் சிக்னலில் இருந்து ராஜிவ் சிக்னல் வழியாக ஊர்வலமாக வந்து, அகில இந்திய செயலாளர் ஆனி ராஜா, மா. கம்யூ., மாநில செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோருடன் மதியம் 12:45 மணிக்கு மனு தாக்கல் செய்தார்.
என்.ஆர்.: என்.ஆர்.காங்., வேட்பாளர் அசோக் ஆனந்த் 51, அப்பா பைத்தியம் சாமி கோவிலில் இருந்து புறப்பட்டு 1.46 மணிக்கு அலுவலகம் வந்தார். மதியம் 1:51 மணிக்கு முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் மனு தாக்கல் செய்தார். தற்காலிக சபாநாயகர் அன்பழகன், அமைச்சர்கள் நமச்சிவாயம், ராஜவேலு, சிவக்கொழுந்து, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ., வையாபுரி மணிகண்டன் மற்றும் கூட்டணிக் கட்சியினர் உடனிருந்தனர்.
சுயேச்சைகள்:: இந்திய குடியரசு கட்சி வேட்பாளராக கலைவாணன் மற்றும் சுயேச்சைகளாக சாமிநாதன், 47; நித்யா, 49; ஜெயபாலன், 50; ரகுநாதன், 45, ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர்.
இன்று பரிசீலனை:: வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று ( 17ம் தேதி) காலை 11:00 மணிக்கு வி.வி.பி. நகரில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் நடைபெறுகிறது. வேட்பாளர்களும் அவர்களின் தகுதியுடைய பிரதிநிதிகள் மட்டுமே இதில் அனுமதிக்கப்படுவர்.
மனுவைத் திரும்பப் பெற நினைப்பவர்கள் வரும் 19ம் தேதி மாலை 3 மணிக்குள் தேர்தல் நடத்தும் அதிகாரி அர்ஜூன் ராமகிருஷ்ணன் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி ஞானவேலுவிடம் அதற்கான கடிதத்தை வழங்க வேண்டும்.
மனுக்கள் திரும்பப் பெறப்பட்ட பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னங்கள் ஒதுக்கப்படும். தொடர்ந்து, தட்டாஞ்சாவடி தொகுதிக்கான ஓட்டுப்பதிவு அக்டோபர் 6ம் தேதி நடைபெறுகிறது. அக்டோபர் 9ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
மாற்று வேட்பாளர்கள் என்.ஆர்.காங்., வேட்பாளர் அசோக் ஆனந்திற்கு மாற்றாக அவரின் தந்தை ஆனந்தன் மாற்றுவேட்பாளராக மனுதாக்கல் செய்துள்ளார். காங்., வேட்பாளர் விநாயகத்திற்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி பூங்கோதை மனு தாக்கல் செய்தார். தி.மு.க., வேட்பாளர் சேதுசெல்வத்திற்கு மாற்று வேட்பாளராக முத்துராமன் மனு செய்துள்ளார்.
