ADDED : மார் 28, 2026 05:15 AM
புதுச்சேரி: புதுச்சேரி மாநில காங்., முன்னாள் தலைவர் சுப்ரமணியன் கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக கூறி ராஜினமா கடிதம் வழங்கினார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில், காரைக்கால் மாவட்டத்தில், இண்டி கூட்டணியில் காரைக்கால் தெற்கு தொகுதி தி.மு.க., வுக்கு ஒதுக்கப்பட்டது. இத்தொகுதியில் தி.மு.க., வேட்பாளராக நாஜிம் நிறுத்தப்பட்டு ஓட்டு சேகரித்து வருகிறார்.
ஆனால் இதே தொகுதியில் காங்., மாநில முன்னாள் தலைவர் சுப்ரமணியன் மகன் சக்திவேல் பிரபு காங்., சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
இத்தொகுதி தி.மு.க., விற்கு ஒதுக்கியதால், அவரை காங்., கட்சி வாபஸ் பெற கூறினர். அவர் வாபஸ் பெறவில்லை. இது குறித்து புதுச்சேரி காங்., தலைமையிடம் தி.மு.க., புகார் அளித்திருந்தது.
இதன் அடிப்படையில் காங்., கட்சி பிரமுகர் சக்திவேல் பிரபு கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையறி ந்து அதிருப்தி அடைந்த அவரது தந்தை சுப்ரமணியன் காங்., கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்து விலகுவதாக நேற்று தனது ராஜினாமா கடிதத்தை புதுச்சேரி காங்., மாநில தலைவர் வைத்திலிங்கத்துக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி உள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
