ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் முன்னாள் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் முன்னாள் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ADDED : ஆக 29, 2025 03:22 AM
புதுச்சேரி:எம்.எல்.ஏ.,களுக்கு பட்டாசு, இனிப்பு வழங்குவதை நிறுத்திவிட்டு, ஊழியர்களுக்கு நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும் என, முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், அரசு சார்ந்த பல்வேறு துறைகளில் சம்பள பாக்கி நிலுவையில் உள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் இல்லாமல், வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
ஆனால், எம்.எல்.ஏ.,க்கள் 2க்கும் மேற்பட்ட அரசு வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். முதல்வர் தேவைக்கு அதிகமாக புதிய வாகனங்களை வாங்கியுள்ளார். கடந்த தீபாவளிக்கு எம்.எல்.ஏ.,களுக்கு பட்டாசு மற்றும் இனிப்பு கொடுப்பதற்காக பல லட்சம் செலவு செய்யப்பட்டது.
தற்போது, தீபாவளி நெருங்குவதால் கவர்னர் பட்டாசு மற்றும் இனிப்புகளைஇலவசமாக வழங்குவதை நிறுத்தி விட்டு, அந்த பணத்தை கொண்டு ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் அளிக்க வேண்டும்.
சம்பளம் போடுவதற்கு பணம் இல்லை என்றால், தீபாவளிக்கு பட்டாசு மற்றும் இனிப்புகளை வழங்க பணம் இல்லை என முதல்வர் அறிவிப்பு வெளியிட வேண்டும்.இல்லையெனில் வரும் தேர்தலில் அனைத்திற்கும் முடிவுரை கிடைக்கும்.
புதிய வேட்பாளர்கள், படித்தவர்கள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும். மக்கள் அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்' என்றார்.
