ADDED : மார் 20, 2026 07:32 AM

புதுச்சேரி: தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசி எந்த படம் மற்றும் வாசகங்கள் இல்லாமல் வெள்ளை நிற பைகளில் விநியோகம் செய்யப்பட உள்ளன.
புதுச்சேரி அரசு சார்பில், மஞ்சள் மற்றும் சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு தலா 10 மற்றும் 20 கிலோ அரிசி மூட்டைகள் மாநிலம் முழுதும் உள்ள ரேஷன் கடைகளில் இலவசமாக கடந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்தது.
ஒவ்வொரு மாதமும் தட்டாஞ்சாவடியில் உள்ள கான்பெட் அலுவலகத்திற்கு லாரியில் வரும் 5,000 டன் அரிசி மூட்டைகளை அலுவலக அதிகாரிகள் தரம் பரிசோதித்த பின்பு ரேஷன் கடைகளுக்கு அனுப்பி, விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், இலவச அரிசி மூட்டைகளில் இருந்த, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் படங்கள் மற்றும் இலவச அரிசி என்ற வாங்கியம் ஆகியவற்றை கலர் பேப்பர் ஒட்டி மறைக்கப்பட்டது.
தொடர்ந்து, நேற்று புதிதாக வந்த அரிசி மூட்டைகள் எந்த படங்கள் மற்றும் வாசகங்கள் இல்லாமல் வெள்ளை நிற பைகளில் லாரிகள் மூலம் கான்பெட் நிறுவனத்திற்கு கொண்டு வரப்பட்டன.
