புதுச்சேரி பல்கலையில் ஜி-20 நுாலக உச்சி மாநாடு துவக்கம்
புதுச்சேரி பல்கலையில் ஜி-20 நுாலக உச்சி மாநாடு துவக்கம்
ADDED : பிப் 07, 2024 11:21 PM

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மூன்று நாள் ஜி-20 நுாலக உச்சி மாநாடு துவங்கியது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஜி-20 மூன்று நாள் நுாலக உச்சி மாநாடு அறிவு மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான நாடுகளை இணைக்கும் சர்வதேச மாநாடு என்ற பெயரில் நேற்று துவங்கியது.
பல்கலைக்கழக நுாலகர் விஜயகுமார் வரவேற்றார்.பேராசிரியர் ஷிபு நோக்கவுரையாற்றினார். துணைவேந்தர் தரணிக்கரசு தலைமை தாங்கி பேசுகையில், 'நம்பகமான ஆதாரங்களில் இருந்து தேவையான தகவல்களை வழங்குவதன் மூலம் வாசகர்களின் சிக்கல்களைக் குறைகின்றன. இதற்கு நுாலகர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது' என்றார்.
கலாசாரம் மற்றும் கலாசார உறவுகளின் இயக்குனர் கிளமென்ட் லுார்து பேசுகையில், 'தரமான கல்வியை வழங்குவதற்கும் கற்பித்தல், கற்றல் மற்றும் ஆராய்ச்சிக்கு நுாலக வல்லுநர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர்' என்றார்.
பேராசிரியர் தேவிகா மடல்லி பேசுகையில், 'உலகெங்கும் உள்ள நுாலகர்கள் திறந்த தரவுக் களஞ்சியங்களை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் ஒத்துழைக்க வேண்டும்' என்றார்.
ஜி 20 நாடுகளின் நுாலகங்கள் ஒத்துழைப்பிற்காக இந்த சர்வதேச மாநாட்டை நடத்த ஆறு மாதங்களுக்கு முன் முடிவு செய்யப்பட்டது. இதற்காகதனி போர்ட்டலும் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த போர்ட்டலை 85 நாடுகளில் இருந்து 1.3 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.
நாளை 9ம் தேதி வரை நடக்கும் இந்த நுாலக மாநாட்டில் ஜி-20 நாடுகளில் இருந்து 300 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்று நுாலக ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கின்றனர்.பாஸ்கர் நன்றி கூறினார்.
