பிரதமர் மோடி, அமித்ஷாவிற்கு கவர்னர் முதல்வர் நன்றி
பிரதமர் மோடி, அமித்ஷாவிற்கு கவர்னர் முதல்வர் நன்றி
UPDATED : ஆக 09, 2026 05:39 PM
ADDED : ஆக 09, 2026 05:32 PM
புதுச்சேரி: பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கவர்னர், முதல்வர் நன்றி தெரிவித்தனர். புதுச்சேரி கோரிமேடு மைதானத்தில் நடந்த ஜனாதிபதி வண்ணக்கொடி வழங்கும் விழாவில் பேசிய கவர்னர் கைலாஷ்நாதன், புதுச்சேரி காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ள தலைசிறந்த செயல்பாடு மற்றும் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில், மதிப்புமிக்க ஜனாதிபதியின் கலர்ஸ் விருது வழங்கியதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், புதுச்சேரியில் 1000-க்கும் மேற்பட்ட உள்ளூர் இளைஞர்களுக்குப் பெரும் வேலைவாய்ப்பை வழங்கும் 2-வது இந்திய ரிசர்வ் பட்டாலியனுக்கு அனுமதி வழங்கியமைக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதுச்சேரி பிரதேசத்தில் உள்ள காவல் துறையை அடிமட்டத்திலிருந்து வலுப்படுத்தவும் அதிகாரப்படுத்தவும் நீங்கள் வழங்கி வரும் ஆதரவிற்கு புதுச்சேரி மக்கள் என்றும் கடமைப்பட்டுள்ளனர் என்றார்.
முதல்வர் ரங்கசாமி பேசும்போது, புதுச்சேரி காவல் துறைக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும். இதற்காக உரிய நிதி அரசு ஒதுக்குகிறது. மத்திய அரசும் துணையாக உள்ளது.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் புதுச்சேரியை சிறந்த மாநிலமாக கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தில் உதவிகள் செய்வது, நிதி வழங்குவது பாராட்டுக்குரியது. இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
