ஆசிரியர்களை பிற பணிகளில் ஈடுபடுத்த... தடை:அதிகாரிகளுக்கு கவர்னர் அதிரடி உத்தரவு
ஆசிரியர்களை பிற பணிகளில் ஈடுபடுத்த... தடை:அதிகாரிகளுக்கு கவர்னர் அதிரடி உத்தரவு
UPDATED : ஜூன் 29, 2026 05:46 AM
ADDED : ஜூன் 29, 2026 02:55 AM

புதுச்சேரி மாநிலத்தில், அரசு சார்பில், ஆரம்ப பள்ளி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை என, மொத்தம் 456 பள்ளிகள் இயங்கி வருகிறது. இப்பள்ளிகளில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிகளில், முதல்வர், தலைமை ஆசிரியர், விரிவுரையாளர், ஆசிரியர் என, மொத்தம் 6,766 பணியிடங்கள் உள்ளன. இதில், பணி ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் 10 முதல் 20 சாதவீதத்திற்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக கற்பித்தல் பணி பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பணியில் உள்ள ஆசிரியர்கள் பலர் பள்ளி கல்வித்துறையில் உள்ள எல்.டி.சி., மற்றும் யூ.டி.சி., பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சிலர் தங்கள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அயல் பணியாக மக்கள் பிரதிநிதிகளின் தனிச் செயலர்கள் மற்றும் அமைச்சர் அலுவலக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
![]() |
அதேபோன்று, பிற துறை பணிகளுக்கு சென்றுள்ளனர். இதனால், அரசு பள்ளிகளில் கற்பித்தல் பணி நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் அமைச்சராக பதவியேற்ற நமச்சிவாயம், தவளக்குப்பம் அரசு கல்லுாரி பேராசிரியரை தனது தனி செயலராக நியமித்துக் கொள்ள அனுமதி கோரி, கவர்னருக்கு கோப்பு அனுப்பப்பட்டது. கோப்பை ஆய்வு செய்த கவர்னர், சம்மந்தப்பட்ட பேராசிரியர் மீது ஏற்கனவே புகார் உள்ளது. மேலும், கற்பித்தல் பணியில் உள்ளவர்கள் இப்பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம்.
வேறு துறையில் உள்ள தகுதி வாய்ந்த நபரை பரிந்துரை செய்திடுமாறு, கோப்பை திருப்பினார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அரசு செயலர்களை அழைத்த கவர்னர் கைலாஷ்நாதன், அரசு துறைகளில் ஒரே இடத்தில் 3 ஆண்டிற்கு மேல் உள்ளவர்களை கட்டாயம் இடமாற்றம் செய்யவும், குறிப்பாக பிராந்திய அளவில் இடமாற்றம் செய்திட உத்தரவிட்டார். அதேபோன்று, பிற துறை பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஆசிரியர்களை திரும்ப பெற உத்தரவிட்டுள்ளார்.
கவர்னரின் இந்த அதிரடி உத்தரவால், கற்பித்தல் பணியை தவிர்த்து எல்.டி.சி., யூ.டி.சி., பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
கவர்னர் தனது அதிரடி உத்தரவை தொடந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து, பிற துறைகளில் உள்ள ஆசிரியர்களை மீண்டும் கற்பித்தல் பணிக்கு கொண்டு வர வேண்டும் என, சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

