ADDED : ஜன 22, 2025 07:48 AM
புதுச்சேரி: புதுச்சேரி ரயில் நிலையத்தில் கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று காலை திடீரென ஆய்வு செய்தார்.
உப்பளம் துறைமுகத்தில் நடந்த தென்னிந்திய அறிவியல் கண்காட்சியை கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று காலை துவக்கி வைத்தார். விழா முடிந்ததும் கவர்னர் கைலாஷ்நாதன் புதுச்சேரி ரயில் நிலையம் சென்றார். அங்கு, நிலை மேலாளர் ராமதாஸ், உதவி மேலாளர் முரளிதரன் கவர்னரை வரவேற்றனர்.
ரயில் நிலைய அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை நடத்தினார். அப்போது, ரயில் நிலைய மறு சீரமைப்பில் எவ்வளவு பணிகள் முடிந்துள்ளது என, கேட்டறிந்தார்.
ரயில் நிலைய வளாகத்தில் ஓட்டல், பயணிகள் தங்கும் இடம் உள்ளதா, புதுச்சேரியில் இருந்து எத்தனை ரயில்கள் இயக்கப்படுகிறது. புதிய ரயில்கள் இயக்க வாய்ப்புகள் இருக்கிறதா என, கேட்டறிந்தார்.
கவர்னரின் கேள்விகளுக்கு ரயில் நிலைய அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அதைத் தொடர்ந்து, கவர்னர் கைலாஷ்நாதன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
