சுகாதார பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கம் முற்றுகை
சுகாதார பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கம் முற்றுகை
ADDED : அக் 14, 2025 03:25 AM

புதுச்சேரி : புதுச்சேரி சுகாதார பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தை உறுப்பினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி, விக்கோந் தே சுயிலாக் வீதியில் சுகாதார பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இங்கு, உறுப்பினர்கள் வாங்கும் கடன்களுக்கு, தீபாவளி பண்டிகையின் போது, லாபத்தின் அடிப்படையில் 3 முதல் 7 சதவீதம் வரை வட்டிக்கழிப்பு தொகை வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக உறுப்பினர்களுக்கு வட்டிக்கழிப்பு தொகை வழங்கவில்லை. இதனை வழங்க வலியுறுத்தியும், மூன்று நபர் நிர்வாக கமிட்டியை கலைத்துவிட்டு தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்வு செய்ய வலியுறுத்தி சங்க உறுப்பினர்கள் நேற்று காலை 10 மணிக்கு, சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சங்கத்தின் நிர்வாக கமிட்டி தலைவர் குணசேகரன், செயலர் மோகன், உறுப்பினர் சரவணன் போராட்டக்குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், நிர்வாக கமிட்டி நிர்வாகிகள் ராஜினாமா செய்வதாகவும், வட்டிக்கழிப்பு தொகை வழங்கல் தொடர்பாக பதிவாளரை சந்தித்து பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதனையேற்று, உறுப்பினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
