புதுச்சேரி காவல் துறையினருக்கு ஹெல்மெட் கட்டாயம்; எஸ்.பி., உத்தரவு
புதுச்சேரி காவல் துறையினருக்கு ஹெல்மெட் கட்டாயம்; எஸ்.பி., உத்தரவு
ADDED : ஆக 21, 2026 08:21 PM
புதுச்சேரி: காவல் துறையில் பணியாற்றும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என போலீஸ் தலைமையக எஸ்.பி., மோகன் குமார் உத்தரவிட்டுள்ளார்.
அவர் பிறப்பித்துள்ள சுற்றிக்கையில், புதுச்சேரி காவல் துறையில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.
சீருடையில் இருந்தாலும் அல்லது சாதாரண உடையில் இருந்தாலும், பணி நேரத்திலோ அல்லது பிற நேரங்களிலோ, அரசு வாகனம் அல்லது சொந்த வாகனம் எதுவாக இருந்தாலும் இந்த உத்தரவு அனைவருக்கும் சமமாகப் பொருந்தும்.
இந்த உத்தரவை மீறி ஹெல்மெட் அணியாமல் வாகனம் இயக்கும் காவல் துறையினர் மீது, மோட்டார் வாகனச் சட்டத்தின்படி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும். அதுமட்டுமன்றி, துறைரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கையும் பாயும். அனைத்து உயர் அதிகாரிகளும் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் காவல் பணியாளர்களுக்கு இந்த அறிவுறுத்தல்களை உடனடியாகக் கொண்டு சேர்த்து, அனைவரும் முழுமையாகப் பின்பற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்டத்தைச் நடைமுறைப்படுத்தும் காவல் துறையே அதற்கு முதன்மையாக திகழ வேண்டும் என்ற நோக்கில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
