மாநில அந்தஸ்து கிடைக்கவில்லை என்றால்... ராஜினாமா?:முதல்வர் ரங்கசாமி ஆவேச அறிவிப்பு
மாநில அந்தஸ்து கிடைக்கவில்லை என்றால்... ராஜினாமா?:முதல்வர் ரங்கசாமி ஆவேச அறிவிப்பு
ADDED : ஆக 29, 2026 05:41 AM

புதுச்சேரி: மாநில அந்தஸ்துக்காக தனது பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
பட்ஜெட் மீதான விவாதத்தில், ஜான்குமார் எம்.எல்.ஏ., பேசும்போது, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து சுலபமாக கிடைத்துவிடும். ஆனால் சிறப்பு மாநில அந்தஸ்து பெற வேண்டும்' என்றார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அன்பழகன், சிறப்பு மாநில அந்தஸ்து வேண்டுமாக அல்லது மாநில அந்தஸ்த்து வேண்டுமா என தெளிவாக கூறுங்கள். சிறப்பு மாநில அந்தஸ்து தேசிய எல்லையோரம் உள்ள, பேரிடர் அதிகம் ஏற்படும் மாநிலங்களுக்கு வழங்கப்படும்' என்றார். அப்போது, எதிர்க்கட்சி தலைவர் நாஜிம், நேரு எம்.எல்.ஏ., ஆகியோர் மாநில அந்தஸ்து தான் வேண்டும் என கூறினர்.
இதை தொடர்ந்து நடந்த விவாதம்:
எதிர்க்கட்சி தலைவர் நாஜிம்: மத்திய அரசு மாநில அந்தஸ்து தராமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சபையை ஒத்தி வைக்க வேண்டும்.
சபாநாயகர் அன்பழகன்: சபையை ஏன் ஒத்தி வைக்க வேண்டும். மாநில அந்தஸ்து தொடர்பாக பல முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே மக்கள் மீது அக்கறை இருந்தால், உங்கள் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யுங்கள்.
ஜான்குமார்: முதல்வர் நினைத்தால் இரண்டு வாரங்களில் மாநில அந்தஸ்து வாங்க முடியும். அவ்வளவு திறமை அவரிடம் உள்ளது.
முதல்வர் ரங்கசாமி: சபையை ஒத்தி வைத்துவிட்டு நாளைக்கே செல்ல நான் தயார். மாநில அந்தஸ்து கிடைக்கும் என்று சொன்னால் பதிவியை ராஜினாமா செய்ய நான் தயார்.
தொடர்ந்து, ஜான்குமார், காங்., எம்.எல்.ஏ., கார்த்திகேயன், அரசு கொறடா ஆறுமுகம் உள்ளிட்ட ஆளும்கட்சியினர் ராஜினாமா செய்வதாக தெரிவித்தனர்.
நாஜிம்: தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளனர்.
முதல்வர் ரங்கசாமி: மாநில அந்தஸ்து எவ்வளவு முக்கியம் என்று எனக்கு நன்றாக தெரியும். நம்முடைய தேர்தெடுக்கப்பட்ட அரசிற்கு அதிகாரம் வேண்டும். அப்படி இருந்தால் தான் புதுச்சேரி மாநிலம் முழுமையான வளர்ச்சி அடையும். பிரதமர் இங்கே வந்தபோது, மாநில அந்தஸ்து கிடைக்காதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளேன். முழுமையான வளர்ச்சிவேண்டும் என்றால் மாநில அந்தஸ்து தேவை.
நாஜிம்: அனைத்து முதல்வர்களும் முயற்சி எடுத்துள்ளனர். கூட்டணியில் இருப்பதால் நீங்கள் கொஞ்சம் போர்குணத்தை காட்ட வேண்டும். மயிலே, மயிலே இறகு போடு என்றால் போட மாட்டார்கள். உங்கள் காலத்தில் வாங்க முடியவில்லை என்றால் எப்போதும் வாங்க முடியாது.
கார்த்திகேயன் (காங்.,): இங்கு மாநில அந்தஸ்திற்கு ஆதரவாக ஓட்டெப்பு நடத்த வேண்டும்.
நேரு: முதல்வர் தலைமையில் வாங்க முடியாத மாநில அந்தஸ்தை வேறு யாராலும் வாங்க முடியாது. மாநில முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அனைத்து எம்.எல்.ஏ.,க்களை டில்லி அழைத்து சென்று, அங்கு முகாமிட்டு பணிகளை செய்ய வே ண்டும்.
நாஜிம்: ஜான்குமார் ராஜினாமா செய்வதாக கூறியது, அவரின் சொந்த கருத்தா.
ஜான்குமார்: என்னுடைய சொந்த கருத்து.
இவ்வாறு விவாதம் நடந்தது.
