எம்.பி.பி.எஸ்., அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 429 ஆக அதிகரிப்பு:முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் இறுதி
எம்.பி.பி.எஸ்., அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 429 ஆக அதிகரிப்பு:முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் இறுதி
UPDATED : ஜூலை 29, 2026 08:14 PM
ADDED : ஜூலை 29, 2026 08:11 PM

புதுச்சேரி: தனியார் மருத்துவக் கல்லுாரி நிர்வாகங்களுடன் நடத்தப்பட்ட அரசு ஒதுக்கீட்டு பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. கடந்த ஆண்டை காட்டிலும் 43 எம்.பி.பி.எஸ்., சீட்டுகள் கூடுதலாக பெறப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் ஒரு அரசு கல்லுாரி மட்டுமின்றி 3 தனியார் மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இக்கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு அதிகம் பெற வேண்டும் என்பது மாணவர்களுடையவும் பெற்றோர்களுடையவும் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகின்றது.
கடந்த 24ம் தேதி தனியார் மருத்துவ கல்லுாரிகளுடன் நடத்தப்பட்ட அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதற்கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த முதல்வர் ரங்கசாமி 50 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களை பெற சட்ட வரைவு தயாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் தனியார் கல்லுாரிகளிடம் மீண்டும் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை சட்டசபை வளாகத்தில் நேற்று நடந்தது.
முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் பிம்ஸ், மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி, வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லுாரி மற்றும் மாகே பிராந்தியத்தில் உள்ள மாகே இன்ஸ்டிடியூட் ஆப் டென்டல் சயின்சஸ் ஆகிய முன்னணி கல்வி நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் கூடுதல் எம்.பி.பி.எஸ்., சீட்டுகளை அரசு ஒதுக்கீட்டு இடங்களாக முன் வந்தனர். அதையடுத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
மொத்த சீட்டுகள்:
கடந்த 2025-26ம் கல்வியாண்டில் தனியார் மருத்துவக் கல்லுாரிகளால் அரசு ஒதுக்கீட்டுக்காக 255 எம்.பி.பி.எஸ்., இடங்களை தந்து இருந்தன. இந்த கல்வியாண்டு மூன்று தனியார் மருத்துவ கல்லுாரிகளும் 298 எம்.பி.பி.எஸ்., இடங்களை முன் வந்துள்ளன. இதன் மூலம் தனியார் கல்லுாரிகளிலிருந்து மட்டும் கூடுதலாக 43 மருத்துவ இடங்கள் அரசு ஒதுக்கீட்டிற்குப் பெறப்பட்டுள்ளன.
இத்துடன், புதுச்சேரி அரசின் சொந்த நிறுவனமான இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள 131 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் சேரும்போது, நடப்பு ஆண்டில் சென்டாக் மூலம் நிரப்பப்பட உள்ள மொத்த எம்.பி.பி.எஸ்., இடங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் 386-லிருந்து 429 ஆக அதிகரித்துள்ளது.
கல்லுாரி வாரியாக
பிம்ஸ் மருத்துவ கல்லுாரி இந்தாண்டு எம்.பி.பி.எஸ்., இடங்களை 150-லிருந்து 250 ஆக நடப்பு கல்வியாண்டில் உயர்த்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், நீதிமன்ற உத்தரவு தொடர்பான அபராத இடங்கள் 13 உட்பட, மொத்தம் 108 இடங்களை அரசு ஒதுக்கீட்டிற்கு வழங்க அக்கல்லுாரி நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.
மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி தனது அரசு ஒதுக்கீட்டு இடங்களை கடந்த ஆண்டின் 93-லிருந்து 95 ஆக உயர்த்தித் தந்துள்ளது. வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரி தனது அரசு ஒதுக்கீட்டு இடங்களை கடந்த ஆண்டின் 92லிருந்து 95 ஆக உயர்த்தி வழங்கியுள்ளது.
தனியார் மருத்துவ கல்லுாரிகளிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் கவுன்சிலிங் ஏற்பாடுகள் சென்டாக் மூலம் முடுக்கிவிடப்பட்டுள்ளன. விரைவில் விண்ணப்ப அறிவிப்பு வெளியாகிறது.
,
தனியார் கல்லுாரிகள் மொத்த சீட் கொடுத்த சீட்டுகள்
பிம்ஸ் 250 108
மணக்குளவிநாயகர் 250 95
வெங்கடேஸ்வரா 95
