/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டசபை செயலரிடம் சுயேச்சை எம்.எல்.ஏ., மனு
/
புதுச்சேரி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டசபை செயலரிடம் சுயேச்சை எம்.எல்.ஏ., மனு
புதுச்சேரி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டசபை செயலரிடம் சுயேச்சை எம்.எல்.ஏ., மனு
புதுச்சேரி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டசபை செயலரிடம் சுயேச்சை எம்.எல்.ஏ., மனு
ADDED : டிச 20, 2024 06:10 AM

புதுச்சேரி: புதுச்சேரி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கோரி, சட்டசபை செயலரிடம் சுயேச்சை எம்.எல்.ஏ., நேற்று மனு வழங்கியுள்ளார்.
புதுச்சேரி, உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு, நேற்று காலை சட்டசபை செயலர் தயாளனை நேரில் சந்தித்து, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கோரி, மனு கொடுத்தார். பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி சபாநாயகர், அப்பதவியின் புனித தன்மையை அவமதிக்கும் வகையில் செயல்படுகிறார். சட்டசபை உறுதிமொழிக்குழு தலைவர் பதவியில் இருந்து என்னை நீக்கியதன் மூலம், அவர் பாகுபாட்டுடன் செயல்படுவதும், அவரது தனிப்பட்ட நோக்கத்தையும், பழிவாங்கும் தன்மையையும் வெளிப்படுத்துகிறது.
சபாநாயகரின் போக்கு அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாக உள்ளது. அமைச்சரவையின் பங்கை மீற முயற்சிக்கிறார். நிழல் முதல்வராக செயல்படுகிறார்.
தற்போது, பொது கணக்கு குழு மற்றும் மதிப்பீட்டுக்குழு தலைவர் பதவியையும் அபகரித்து அரசியலமைப்புக்கு முரணாக செயல்பட்டு, தணிக்கை குழுவிற்கு தலைமை தாங்கியுள்ளார்.
இதன் மூலம் அரசியலமைப்பு விதிமுறைகளை மீறி, முன்னோடியில்லாத எடுத்துக்காட்டை உருவாக்கி, அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார். முக்கியமான அழைப்பிதழில் தனது படத்தை திணிக்க அரசியல் அமைப்புகளையும், அதிகாரிகளையும் வலியுறுத்துகிறார். இதன் மூலம், சபாநாயகர் பதவி தனது மதிப்பை இழந்துள்ளது.
எனவே சபாநாயகர் மீது சட்டசபை நடைமுறை, நடத்தை விதிகளின்படி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர வேண்டி, சட்டசபை செயலரிடம் மனு அளித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.