தகவல் தொழில்நுட்ப பூங்கா கார்த்திகேயன் வலியுறுத்தல்
தகவல் தொழில்நுட்ப பூங்கா கார்த்திகேயன் வலியுறுத்தல்
ADDED : ஆக 28, 2026 08:13 PM
புதுச்சேரி: பட்ஜெட் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் (காங்.,)கார்த்திகேயன் பேசியதாவது;
புதுச்சேரியில் வேலை வாய்ப்பை உறுதி செய்ய புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காவை அரசு அமைக்க வேண்டும். எம்.என்.சி., கம்பெனிகளை மாநிலத்திற்கு அழைத்து வர சிறப்பு மாநாடுகளை நடத்தி, அழைப்பு விடுக்க வேண்டும்.
புதிய சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் ஆன்மிக சுற்றுலா திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஊசுடு ஏரியை சீரமைத்து, நடைபாதை மற்றும் ஓய்வு எடுக்க இருக்கைகள் அமைக்க வேண்டும். படகு சவாரியை நவீனப்படுத்தி, கூடுதல் படகுகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
ஏரிக்கரையில் நவீன சிறுவர் விளையாட்டுப் பூங்கா, பத்துக்கண்ணு சந்திப்பில் சமுதாய நலக்கூடம், . பிள்ளையார்குப்பம், கூடப்பாக்கம் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே படுகை அணை அமைக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் தொண்டமாநத்தம், கரசூர் கிராமங்களில் இலவச மனைபட்டா வழங்கிட வேண்டும். பத்துக்கண்ணு, சேதராப்பட்டு பகுதிகளில் 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். தொண்டமாநத்தம் துணை மின் நிலையத்தில் கூடுதலாக 100 மெகாவோல்ட் திறன் கொண்ட மின்மாற்றிகளை விரைவில் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
