/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பேராசிரியை வீட்டில் நகை, பணம் திருட்டு
/
பேராசிரியை வீட்டில் நகை, பணம் திருட்டு
ADDED : பிப் 12, 2026 04:37 AM

பாகூர்: பாகூர் அருகே ஓய்வு பெற்ற பேராசிரியை வீட்டின் கதவை உடைத்து பொருட்கள் திருடு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர் அடுத்த ஆதிங்கப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் காந்திமேரி, 72; ஓய்வு பெற்ற பேராசிரியை. இவர் பல்வேறு நுால்களை எழுதியுள்ளார். இவரது வீட்டின் மேல் மாடியில், இரண்டு குடும்பத்தினர் வாடகைக்கு வசித்து வருகின்றனர். வீட்டையும் தோட்டத்தையும் பராமரிக்கும் பணியில், அப்பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் வேலை செய்து வருகிறார்.
காந்திமேரி, உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கடந்த சில நாட்களுக்கு முன், தனது சொந்த ஊரான மதுரைக்கு சென்றார்.
நேற்று முன்தினம் காலை மூதாட்டி தோட்ட வேலை செய்வதற்காக சென்றார். அப்போது, வீட்டின், பின் கேட் மற்றும் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பாகூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்து, 3 பீரோக்களை உடைத்து அதில் உள்ள நகை, பணம் மற்றும் பொருட்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.
பேராசிரியை காந்திமேரி வெளியூரில் இருப்பதால், அவர் வீடு திரும்பிய பிறகு தான், திருடு போன பொருட்களின் விவரம் தெரியவரும்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

