/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அறியாத பொக்கிஷங்களை உள்ளடக்கியது காமிகாகமம் நுால்: சோமசேகர சிவாச்சாரியார்
/
அறியாத பொக்கிஷங்களை உள்ளடக்கியது காமிகாகமம் நுால்: சோமசேகர சிவாச்சாரியார்
அறியாத பொக்கிஷங்களை உள்ளடக்கியது காமிகாகமம் நுால்: சோமசேகர சிவாச்சாரியார்
அறியாத பொக்கிஷங்களை உள்ளடக்கியது காமிகாகமம் நுால்: சோமசேகர சிவாச்சாரியார்
ADDED : பிப் 01, 2026 06:55 AM

புதுச்சேரி: புதுச்சேரி சைவ ஆராய்ச்சி மையம் சார்பில் காமிகாகமம் (முதற் பகுதி) நுால் வெளியிட்டு விழா நேற்று நடந்தது.
பு துச்சேரி அரவிந்தர் வீதியில் உள்ள சைவ ஆராய்ச்சி மையத்தில் நடந்த விழாவிற்கு, சைவ ஆராய்ச்சி மைய இயக்குனர் கணேசன் முன்னிலை வகித்தார். சென்னை, சோமசேகர சிவாச்சாரியார் (பண்டிட்) காமிகாகமம் நுாலை வெளியிட்டார். இந்த நுால், முதல் 5 படலங்கள் மற்றும் 17 சுவடிகளின் ஆகமத்தின் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நுால், தமிழ், சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
நுாலை வெளியிட்ட சோமசேகர சிவாச்சாரியார், மதிப்புரை வழங்கி பேசியதாவது:
உலகை இறைவன் படைத்து, அறம், பொருள், இன்பத்தை வழங்கி, பாசம் சமூகங்களில் இருந்து விடுபட்டு, பரம்பொருளின் முக்தி நிலையை, உயிர்களும் அடைய வேண்டும் என்பதற்காக அருள் செய்த முதல் முழு நுால்கள் வேத ஆகமங்கள்.
அடிப்படையான மூல, வேத ஆகமங்கள் இரண்டையும் அருள் செய்தவன் இறைவன். வேதம் முதலான எல்லா சாத்திரங்களும் ஞானம் என்ற பெயர் உள்ளது. ஆகம வேதங்களை பற்றி காமிகாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
சைவம் என்பது பல வகையில், பல பிரிவுகளில் உள்ளது. முக்கியமாக சிவனின் 5 முகத்தில் இருந்து வெளிப்பட்ட 5 சைவங்கள். அதில், மேல் முகமாக இருக்கக்கூடிய ஈசான முகத்தில் இருந்து தோன்றிய 28 ஆகமங்களுக்கு மட்டுமே சித்தாந்தம் என்று தனி பெருமை உள்ளது.
அனைத்து உயிர்களுக்கும் இன்பம் தரக்கூடிய ஆகமம் எதுவென்றால் சைவ சித்தாந்த ஆகமம். இந்த ஆகமம் தான் போகத்தையும், மோட்சத்தையும் தரக்கூடியது. ஆகமம் என்பது வேதத்திற்கு ஒப்பானது. வேதம் எப்படி வந்தது என்று சொன்னால், செவி வழியாக வந்துள்ளது. கேட்டு, கேட்டு வந்ததால்தான் அதற்கு சுருதி என்று பெயர்.
ஆகமங்கள் எப்படி வந்தது என்றால், பரமேஸ்வரன், அம்பிகை, விஷ்ணு, விநாயகர், சுப்ரமணியர் முதலியோருக்கு 28 மூல சிவாகமங்களையும், 207 உபாகமங்களையும் உபதேசித்து அருளினார். அதில், முதல் ஆகமமான ஸ்ரீமத் காமிகாகமத்தை பல ஓலைச்சுவடி பாடங்களோடு ஒப்பீடு செய்து திருந்திய பதிப்பாக புதுச்சேரி அரவிந்தர் வீதியில் உள்ள சைவ ஆராய்ச்சி மையத்தால் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த காமிகாகமம் நுாலானது, திருக்கோவில்களில் செய்யக்கூடிய பூஜை முறைகள், கோவில் கட்டடக்கலை, சிற்பக்கலை, நடனக்கலை, கிராம நிர்மாணம் உள்ளிட்ட பல விஷயங்களையும் ஆன்மிகத்தின் உச்சநிலையான வீடுபேற்றினையை விவரிக்கும். இதுபோன்ற அறியா பல பொக்கிஷங்களை உள்ளடக்கிய பெரும் சாத்திர நுாலாகும் என்றார்.
விழாவில், சிறப்பு விருந்தினர்களாக காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் ஸ்தல மிராசுதாரர்கள் சென்னை புரசைவாக்கம் சரவண குருக்கள், சென்னை ஜார்ஜ் டவுன் கச்சபேச குருக்கள், சென்னை வியாசர்பாடி சிவக்குமார் குருக்கள், சைவ ஆராய்ச்சி மையத்தின் உதவியாளர்கள் திருக்குமரன், கவுரிசங்கர், அரவிந்தகுமார், நரேந்திரன் குருக்கள் மற்றும் சைவ, ஆகம வேத ஆராய்ச்சியாளர்கள், புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டியூட்டில் பயிலும் ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
காமிகாகமம் நுால் வேண்டுவோர், புதுச்சேரி அரவிந்தர் வீதியில் உள்ள சைவ ஆராய்ச்சி மையத்தை அணுகலாம். அல்லது 7871393832 மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

