/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்கால் கார்னிவல் கட்டுமரப் போட்டி
/
காரைக்கால் கார்னிவல் கட்டுமரப் போட்டி
ADDED : ஜன 19, 2025 05:59 AM

காரைக்கால் கார்னிவல் விழாவில் நேற்று கட்டுமரப் போட்டி நடந்தது.
காரைக்கால் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து கடந்த 16ம் தேதி முதல் கார்னிவல் விழாவை நடத்தி வருகிறது. விழாவில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது. அதன் ஒரு பகுதியாக நேற்று அரசலாற்றில் கட்டுமரம் போட்டி நடந்தது.
இதில் காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு, காளிகுப்பம், அக்கம்பேட்டை, பட்டினச்சேரி, மண்டபத்துார் உட்பட 11 அணிகள் பங்கேற்றன. போட்டியை அமைச்சர் திருமுருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். துணை கலெக்டர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
போட்டியில், ஒரு கட்டுமரத்தில் 3 பேர் வீதம் பங்கேற்றனர். அரசலாற்று பாலம் அருகே போட்டி துவங்கியது. 800 மீட்டர் துாரம் வரை சென்று, அதே இடத்திற்கு திரும்பி வரவேண்டும்.
கட்டுமரத்தில் உள்ள வீரர்கள் தங்களது துடுப்புகளை கம்பீரமாக இயக்கி சென்றனர். இப்போட்டியில் பட்டினச்சேரி மீனவ கிராமம் முதல் பரிசையும், காரைக்கால்மேடு இரண்டாம் பரிசையும், காளிகுப்பம் கிராமம் மூன்றாம் பரிசையும் தட்டி சென்றது.
கட்டுமரப்போட்டியில் கலந்துகொண்ட வீரர்களுக்கு அமைச்சர் திருமுருகன் பாராட்டு தெரிவித்தார். முன்னதாக மினி மாரத்தான் போட்டி, கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி, உள்விளையாட்டு அரங்கம் உட்பட பல்வேறு முக்கிய சாலைகள் வழியாக கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்தது.
நிகழ்ச்சியில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் கோவிந்தசாமி, டி.ஜ.ஜி., சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா, எஸ்.பி., சுப்ரமணியன், பாலச்சந்தர் உட்பட பலர் பங்கேற்றனர். கட்டுமரப் போட்டியை ஏராளான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

