ADDED : ஏப் 27, 2026 06:02 PM
புதுச்சேரி: காட்டேரிக்குப்பம் சுத்துக்கேணி செல்லும் சாலையில் விவசாய கூலி தொழிலாளி தலையில் காயத்துடன் இறந்து கிடந்தார்.
குமாரப்பாளையம், அமட்டன்குளம் இருளர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெயராம், 70; விவசாய கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உடைய ஜெயராம், நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார்.
இந்நிலையில், அவர் குடிபோதையில் காட்டேரிக்குப்பம்- சுத்துக்கேணி செல்லும் சாலையோரம் உள்ள செடிகள் அடர்ந்த இடத்தில் தலையில் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் வந்துள்ளது.
இதையடுத்து, அவரது மகன் அளித்த தகவலின்பேரில், காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ஜெயராம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

