ADDED : டிச 15, 2025 06:10 AM

புதுச்சேரி: பெத்துசெட்டிப்பேட், பண்டிட் துரைசாமி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான வாழ்க்கைத் திறன் மற்றும் தலைமைப் பண்பு பயிற்சி முகாம் நடந்தது.
ஆசிரியர் கமலா வரவேற்றார். உடற்கல்வி ஆசிரியர் நாராயணன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் உஷா தலைமைத் தாங்கினார்.
வைத்தியநாதன் எம்.எல்.ஏ., பயிற்சி முகாமைத் துவக்கி வைத்து, பள்ளிப் பருவத்தில் மாணவர்கள் கல்வி, அறிவு மற்றும் ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மாணவப் பருவத்திலேயே இந்திய அளவில் நடந்து வரும் அரசு உயர் பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வெற்றிப் பெற முடியும் என்ற நம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
காலத்தைப் பயன்படு த்தி சாதிக்க வேண்டும். வறுமைக்கும் வாழ்வில் சாதிப்பதற்கும் தொடர்பில்லை என்றார்.உழவர்கரை தாசில்தார் செந்தில்குமார் பிளஸ் 2 பிறகு உயர் கல்வி படிப்புகளை தேர்ந்தெடுப்பது மற்றும் மாநில, மத்திய அரசு சார்பாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை எழுதும் முறைகள் குறித்துப் பேசினார்.
புதுச்சேரி அரசின் சிறுவர் நலக்குழு முன்னாள் உறுப்பினர், எழுத்தாளர் அரிமதி இளம்பரிதி திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து பயிற்சி அளித்தார். ஆசிரியர் அருணா நன்றி கூறினார்.

