ADDED : அக் 29, 2024 06:24 AM

பாகூர்: கடற்கரை நிலங்களை கையகப்படுத்தும் அரசின் நடவடிக்கையை கண்டித்து, மா. கம்யூ., கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியக்கோவில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மா.கம்யூ., பாகூர் கொம்யூன் செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் கலியன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் ராஜாங்கம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், பிரபுராஜ், தமிழ்செல்வன், தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளர் கூட்டமைப்பு சி.ஐ.டி.யூ., மாநில துணை தலைவர் வைத்திலிங்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் அறிவிக்கை 2019-க்கு எதிராகவும், பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது கடற்கரை நிலங்களை கையகப்படுத்துதல் மற்றும் அது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் நடத்திட கூடாது.
அரசு சுற்றுலா வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் கடற்கரைப் பகுதியை கார்ப்ரேட் முதலீடுகளை அனுமதிக்கும் வகையில் வரைவு திட்டங்கள் ஒரு தலைபட்சமாக உருவாக்குவதாக குற்றம் சாட்டி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
நிர்வாகிகள் செல்வநாதன், கலைஞானம், மீனவர் பெண்கள் அமைப்பின் நிர்வாகி ஜெயந்தி, மா.கம்யூ., நிர்வாகிகள் இளவரசி, பக்தவச்சலம், வடிவேலு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

